Search This Blog

Sunday, March 6, 2011

அ.தி.மு.க., அணிக்கு காங்கிரஸ் வருமா

தி.மு.க., கூட்டணியிலிருந்து காங்கிரசை கழற்றி விட்டதால், அ.தி.மு.க., கூட்டணி கட்சிகள் மத்தியில், அணி மாற்றம் ஏற்படுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. தி.மு.க.,விடம் உருவாகியுள்ள கசப்புணர்வு தொடருமானால், அ.தி.மு.க., அணியிலோ அல்லது தனித்து போட்டியிடவோ காங்கிரஸ் முடிவெடுக்கவுள்ளது. அ.தி.மு.க., அணியில் காங்கிரஸ் இடம்பெறுமானால், ம.தி.மு.க.,வை தவிர, இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தி.மு.க., அணியில் இடம்பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
சட்டசபை தேர்தலுக்கு, இன்னும் 36 நாட்களே உள்ள நிலையில், தி.மு.க., - அ.தி.மு.க., அணியில் இடம்பெற்றுள்ள கூட்டணிக் கட்சிகள் மத்தியில், பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது."அ.தி.மு.க., நமக்கு எதிரி கட்சி; காங்கிரஸ் துரோகி கட்சி. காங்கிரசை ஒழிக்க வேண்டும் என்பது அண்ணாதுரையின் லட்சியமாக இருந்தது. அவரது கனவு நனவாகும் வகையில், இனி ஒட்டும் வேண்டாம்; உறவும் வேண்டாம்' என, தி.மு.க., உயர்மட்ட குழு கூட்டத்தில் கூறப்பட்டதாக, அதில் கலந்து கொண்ட மூத்த தலைவர் ஒருவர் பேசியதாக கட்சியினர் தெரிவித்தனர். கூட்டணி முறிவு குறித்து தி.மு.க., எடுத்துள்ள முடிவுக்கு மத்திய அமைச்சர் வாசன், "பொறுத்திருந்து பார்ப்போம்' என கருத்து தெரிவித்துள்ளார். "காங்கிரஸ் வெளியேற்றப்படுவதால், தி.மு.க., கூட்டணிக்கு பாதிப்பு இல்லை' என, பா.ம.க., - விடுதலைச் சிறுத்தைகள் அறிவித்துள்ளன.இன்று அல்லது நாளை, முதல்வரிடம் காங்கிரஸ் தலைவர் சோனியாவின் தூதர் சமரச பேச்சுவார்த்தை நடத்துவார் என்ற ஒரு எதிர்பார்ப்பும், தி.மு.க.,வுடன் கூட்டணி தொடர வேண்டாம், அ.தி.மு.க., வுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்ற மற்றொரு எதிர்பார்ப்பும் காங்கிரஸ் தரப்பில் எழுந்துள்ளது.

கூட்டணி தொடர்பாக அ.தி.மு.க., முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவர், அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலர் ராகுலிடம் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி முடித்துள்ளார் என்ற தகவலும் கசிந்துள்ளது. மேற்கு வங்கம், கேரளா போன்ற மாநிலங்களில் அதிக வெற்றி பெற வேண்டுமானால் தி.மு.க.,வுடன் தொடர்பு இல்லாமல் இருப்பது நல்லது என்ற கருத்தும் ராகுலிடம் இருக்கிறதாம்.அதனால். "தனித்து போட்டியிடுவோம், தன்மானத்தை காப்போம்' என்ற கோஷமும் தமிழக காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.தனித்து போட்டியிட்டால் காங்கிரசுக்கு பலன் இருக்காது என்றாலும், காங்கிரசின் பலம் தெரிய வாய்ப்புள்ளது என, தொண்டர்கள் கருதுகின்றனர். ஆனால், காங்கிரஸ் கோஷ்டி தலைவர்கள் மற்றும் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் தனித்து போட்டியிட அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை.

அ.தி.மு.க., அணியை பொறுத்தவரை, தே.மு.தி.க., மற்றும் சில கட்சிகளுக்கு சேர்த்து, 49 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தக் கூட்டணியில் காங்கிரஸ் சேருமானால், அக்கட்சிக்கு, 45 முதல், 54 தொகுதிகளும், ம.தி.மு.க.,வுக்கு 15 தொகுதிகளும் பிரித்துக் கொடுத்தால் அ.தி.மு.க.,வுக்கு 126 தொகுதிகளில் போட்டியிட வாய்ப்புள்ளது.குழப்பம் : அ.தி.மு.க., அணியில் காங்கிரஸ் சேருமானால், ம.தி.மு.க., இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் அக்கூட்டணியில் நீடிக்குமா என்ற மற்றொரு கேள்வியும் எழுந்துள்ளது. ம.தி.மு.க.,வை பொறுத்தவரையில் பிரதான எதிரியாக தி.மு.க.,வை தான் கருதுகிறது.நடப்பதோ சட்டசபை தேர்தல். காங்கிரஸ் எந்த அணியில் இருக்கிறது என்பதை பற்றி ம.தி.மு.க., கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை என, அக்கட்சியினர் கூறுகின்றனர்.

மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளைப் பொறுத்தவரையில், காங்கிரஸ் தேசிய அளவில் பிரதான எதிரி கட்சி. காங்கிரஸ் இருக்கும் கூட்டணியில், இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இருக்க வாய்ப்பு இல்லை. இதனால், அ.தி.மு.க., அணியிலிருந்து கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளியேறும் நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.அ.தி.மு.க., அணிக்கு காங்கிரஸ் வரும் பட்சத்தில், தி.மு.க., அணிக்கு இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தாவக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. இரு கம்யூனிஸ்ட் கட்சிகளையும் தி.மு.க., கூட்டணிக்கு வர வேண்டும் என திருமாவளவன் ஏற்கனவே அழைப்பு விடுத்துள்ளார்.தொகுதிப் பங்கீடு தொடர்பாக இரு கம்யூனிஸ்ட் கட்சிகளையும் அ.தி.மு.க., அழைக்காமல் தாமதப்படுத்துவதற்கு காங்கிரசுடன் நடத்தி வரும் பேச்சுவார்த்தை தான் காரணம் என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மார்க்சிஸ்ட் கம்யூ., இன்று அவசர கூட்டம் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு, மாநில குழுக் கூட்டம், அவசர அவசரமாக இன்று கூடுகிறது. அக்கட்சியின் மாநில செயலர் ராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில், "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் தி.நகரில் உள்ள மாநில குழு அலுவலகத்தில் இன்று நடக்கிறது. மாநில குழுக் கூட்டம் வரும் 9ம் தேதி பெரம்பூரில், வடசென்னை மாவட்டக் குழு அலுவலகத்தில் நடக்கிறது. இக்கூட்டத்தில், கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் மாவட்டச் செயலர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்' என்று கூறியுள்ளார்.

No comments: