Search This Blog

Tuesday, March 22, 2011

நேரில் சந்திக்காமல் பேக்ஸ் மூலம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஜெ, விஜயகாந்த்



கூட்டணி , ஒப்பந்தம் என்பது மனமொத்து செய்து கொள்வது. ஆனால் அதி்முக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும், தேமுதிக தலைவர் விஜயகாந்த் தும் நேரில் பார்த்துக் கொள்ளாமலேயே பேக்ஸ் மூலம் கையெழுத்துப் போட்டு நூதன முறையில் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளனர்.

அதாவது வேண்டா வெறுப்பான கூட்டணியாக இது மலர்ந்துள்ளது. எப்போது வேண்டுமானாலும் பிய்த்து்க கொண்டு போகக் கூடிய அளவுக்கு இரு கட்சிகளுக்கிடையே கடும் இறுக்கமான நிலை காணப்படுகிறது. வாக்குப் பதிவு முடிந்த அடுத்த நிமிடமே இந்தக் கூட்டணி பிரிந்து போகக் கூடிய வாய்ப்புகளும் அதிகம் உள்ளன.

அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்ட அத்தனை கட்சிகளின் தலைவர்களும் போயஸ் தோட்டத்திற்கு நேரில் வந்து ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டு விட்டு, வெளியில் காத்திருந்த செய்தியாளர்களிடம் பேசி விட்டுச் சென்றனர். ஆனால் விஜயகாந்த் மட்டுமே ஒப்பந்தத்தில் கையெழுத்திட போயஸ் தோட்டம் வரவில்லை.

பேச்சுவார்த்தைகளின்போது அவரது சார்பில் மச்சான் சுதீஷும், அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனும் மட்டுமே வந்து போய்க் கொண்டிருந்தனர். தொகுதிகள் முடிவானதும் அதுதொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட விஜயகாந்த், போயஸ் தோட்டத்திற்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் விஜயகாந்த் வர மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. அவரை ஜெயலலிதாவை சந்தித்து கையெழுத்திட்ட அவரது கட்சி நிர்வாகிகள் கேட்டுக் கொண்டும் கூட விஜயகாந்த் போக மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு அதை பேக்ஸ் மூலம் போயஸ் தோட்டத்திற்கு அனுப்பி வைத்தனராம்.

இப்படியும் ஒரு கூட்டணி....!

கருத்து வேறுபாடு இல்லை-பண்ருட்டி ராமச்சந்திரன்:

இந் நிலையில் அதிமுகவுடன் கருத்து வேறுபாடு எதுவும் இல்லை என்று தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்தார்.

நிருபர்களிடம் பேசிய அவர், அதிமுகவுடன் நடந்த பேச்சுவார்த்தையின்போது இறுதி செய்யப்பட்ட பட்டியல்தான் இப்போது வெளியிடப்பட்டுள்ளது. நாங்கள் இணைந்து போட்டியிடுகிறோம். எங்களுக்குள் எந்தவிதமான கருத்து வேறுபாடுகளும் இல்லை. எங்களுக்குள் குழப்பம் நிலவுவதாக சிலர் அவதூறு பிரசாரம் செய்தனர். இப்போது தொகுதிப் பட்டியல் வெளியிடப்பட்டிருப்பதன் மூலம் எங்களுக்குள் கருத்து வேறுபாடு இல்லை என்பதை தெளிவுப்படுத்தியுள்ளோம்.

அனைத்து கட்சிகளுமே அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் தவறு இல்லை. சில தொகுதிகளை ஒதுக்கீடு செய்வது குறித்து பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு கண்டுள்ளோம். அதன் அடிப்படையில்தான் அதிமுக ஏற்கெனவே அறிவித்திருந்த விருகம்பாக்கம், ஆலந்தூர் உள்ளிட்ட சில தொகுதிகளை எங்களுக்காக விட்டுக் கொடுத்துள்ளது.

வேட்பாளர்கள் யார் என்று பார்த்து எங்கள் கட்சித் தொண்டர்கள் தேர்தல் வேலை பார்ப்பது இல்லை. கூட்டணிக் கட்சியினர் யார் நின்றாலும் அவர்களது வெற்றிக்காக பாடுபடுவார்கள். தேர்தலை புறக்கணிப்பதாக மதிமுக அறிவித்துள்ளது குறித்து நாங்கள் கருத்து ஏதும் கூற விரும்பவில்லை என்றார்.

No comments: