Search This Blog

Tuesday, March 22, 2011

ரிஷிவந்தியத்தை விஜயகாந்த் தேர்ந்தெடுக்க காரணம் என்ன

விழுப்புரம் மாவட்டத்தில், தொழில் வளர்ச்சி இல்லாத பின்தங்கிய குக்கிராமங்கள் அடங்கிய ரிஷிவந்தியத்தை, விஜயகாந்த் தேர்வு செய்ய காரணம் என்ன என்ற கேள்வி, வாக்காளர்களிடையே எழுந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ரிஷிவந்தியம் தொகுதி, மக்கள் அதிகம் கேள்விப்படாத தொகுதி. விவசாயத்தை முக்கிய தொழிலாக கொண்ட பின்தங்கிய கிராமங்களை உள்ளடக்கியது. காங்., சார்பில் ஐந்து முறை போட்டியிட்டு, நான்குமுறை வெற்றி பெற்ற சிவராஜ் எம்.எல்.ஏ., தனிப்பட்ட செல்வாக்குடன் ஆறாவது முறையாக போட்டியிட தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில், இத்தொகுதியை தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் துணிச்சலுடன் தேர்வு செய்துள்ளார். கடந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்தின்போது, ரிஷிவந்தியம் தொகுதியில் விஜயகாந்துக்கு கூடிய கூட்டம் வியப்பை ஏற்படுத்தியது. விழுப்புரம் மாவட்டத்தில், தே.மு.தி.க.,வுக்கு செல்வாக்கு இருப்பதை, அப்போது தான் அவர் உணர்ந்தார். அவரது மாமனார் ஊரான மூங்கில்துறைப்பட்டு, இத்தொகுதியில் அடங்கியுள்ளது. இதனால், லோக்சபா தேர்தலில் ரிஷிவந்தியத்தை உள்ளடக்கிய கள்ளக்குறிச்சி தொகுதியில், அவரது மைத்துனர் சுதீஷை களமிறக்கினார்.

ரிஷிவந்தியம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதியில், ஆர்ப்பாட்டம், ஆரவாரமின்றி, 24 ஆயிரத்து 512 ஓட்டுகளைப் பெற்றார். இதன் மூலம், ரிஷிவந்தியம் தே.மு.தி.க.,விற்கு செல்வாக்கு உள்ள தொகுதியாக விஜயகாந்த் கணித்து வைத்திருந்தார். எனினும், உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிடவே விஜயகாந்த் விரும்பினார். அ.தி.மு.க.,வுடன் ஏற்பட்ட தொகுதி பங்கீட்டில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக, திருக்கோவிலூர், ரிஷிவந்தியம் தொகுதிகளே தே.மு.தி.க.,விற்கு ஒதுக்கப்பட்டது. இவை இரண்டில், ரிஷிவந்தியத்தை விஜயகாந்த் தேர்வு செய்தார். அதற்குக் காரணம், நான்கு முறை வெற்றி பெற்ற காங்., எம்.எல்.ஏ., சிவராஜ், தொகுதிக்காக எதுவும் செய்யவில்லை என்ற எதிர்ப்பு அலையும், சிவராஜ், மற்றும் கள்ளக்குறிச்சி காங்., எம்.பி., ஆதிசங்கர் இடையே நீடித்து வரும் நீண்ட கால பகையும் தான்.

No comments: