Search This Blog

Sunday, April 24, 2011

இனி எந்த அணிக்கும் ஆதரவு கிடையாது: ம.தி.மு.க., முக்கிய முடிவு

எந்த கட்சிக்கும் இனி பல்லக்கு தூக்கியாக இருக்க மாட்டோம்; இனி தனித்தே செயல்பட்டு எங்கள் பலத்தை நிரூபிப்போம்' என, ம.தி.மு.க., முடிவு செய்துள்ளது.

சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியில் ம.தி.மு.க.,வுக்கு சொற்ப இடங்களே ஒதுக்கப்பட்டதால், அ.தி.மு.க., கூட்டணிக்கு ம.தி.மு.க., முழுக்கு போட்டது. வேறு எந்த அணியிலும் சேராமல், தேர்தலையும் புறக்கணித்தது.ம.தி.மு.க.,வின் இந்த முடிவு, தி.மு.க.,வுக்கு சாதகமானது என முதலில் கூறப்பட்டது. ஆனால், தேர்தல் முடியும் வரை, தி.மு.க.,வை ஆதரித்து ம.தி.மு.க.,வினரோ, அதன் பொதுச் செயலர் வைகோவோ எந்த அறிக்கையும் வெளியிடவில்லை."வைகோ என் நல்ல நண்பர், எப்போதும் அவர் மீது எனக்கு மரியாதை உண்டு' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா கூறியிருந்தார். அப்போதும், அ.தி.மு.க., அணிக்கு வைகோ எந்த ஆதரவையும் தெரிவிக்க வில்லை.சட்டசபைத் தேர்தலை ம.தி.மு.க., புறக்கணிக்கும் என வைகோ அறிவித்தவுடன், ம.தி.மு.க.,வில் தொண்டர்கள் சிலர் அதிருப்தி அடைந்தனர். ஆனால், வைகோவின் இந்த முடிவிற்கு பெரும் வரவேற்பு கிடைத்ததும், அந்த அதிருப்தி மறையத்துவங்கியது.தமிழகத்தில் உள்ள அரசியல் சார்பு அல்லாதவர்களும், உலகம் முழுவதும் உள்ள தமிழர்களும் வைகோவின் முடிவை ஆதரித்து கருத்து தெரிவித்தனர். இதனால், ம.தி.மு.க.,வில் புதிய எழுச்சி ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், தேர்தலுக்குப் பின், ம.தி.மு.க., எப்படி இயங்கப்போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து ம.தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:கூட்டணி அமைக்கும் விஷயத்தில் ம.தி.மு.க., எப்போதும் உறுதியாகத்தான் இருந்தது. 2004ல், பா.ஜ., கூட்டணி அரசுக்கு அ.தி.மு.க., ஆதரவை வாபஸ் பெற்றது. அப்போதும் நாங்கள் பா.ஜ.வைத்தான் ஆதரித்தோம்.அந்த கூட்டணியில் தான் தி.மு.க., இணைந்தது. நாங்களாக போய் தி.மு.க.,வை ஆதரிக்கவில்லை. அடுத்தடுத்த தேர்தல்களிலும் ம.தி.மு.க.,வை தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் கரிவேப்பிலை மாதிரிதான் பயன்படுத்தின.எங்களுக்கு என தனி ஓட்டு வங்கி உள்ளது. இனி எங்கள் ஓட்டு வங்கியை அந்த இரு கட்சிகளும் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம். எங்களுக்கு என தனி பாதை வகுத்து, அதில் பயணம் செய்வோம். தனித்தே செயல்பட்டு எங்கள் பலத்தை நிரூபிப்போம்.இரு கட்சிகளையும் தோளில் தூக்கிச் செல்பவர்களாக இனி ம.தி.மு.க.,வினர் இருக்க மாட்டார்கள். எங்கள் நிலைக்கு மக்களிடம் பெரும் ஆதரவு உள்ளது. அது எந்த அளவு இருக்கிறது என்பதை தேர்தல் முடிந்த பின்னர் நிரூபிப்போம்.இவ்வாறு ம.தி.மு.க., வட்டாரங்கள் கூறின.

தமிழின படுகொலைக்கு கருணாநிதி காரணம்: விஜயகாந்த் குற்றச்சாட்டு

தமிழின படுகொலை என்ற களங்கத்துக்கு கருணாநிதி தான் முதற்காரணம் என வரலாறு தூற்றும்' என்று, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

விஜயகாந்த் விடுத்துள்ள அறிக்கை:பாமர மக்களை திசை திருப்பும் வகையில், அரசியல் தலைவர்கள் கபட நாடகம் ஆடுவது கண்டிக்கத்தக்கது மட்டுமல்ல, ஆபத்தானது. விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஒடுக்கப் போவதாகக் கூறி, இந்திய அரசின் துணையோடு இலங்கை அரசு இறுதிக்கட்ட போரில், தமிழினப் படுகொலை நடத்தியது. பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் இலங்கை அரசின் முப்படைகளாலும் வீசப்பட்ட கொத்து குண்டுகளுக்கு இரையாயினர்.தமிழக முதல்வர் கருணாநிதி, இப்படுகொலையை தடுத்து நிறுத்துவார் என்று உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் எதிர்பார்த்தனர். தமிழின வாழ்வை விட முதல்வர் பதவி பெரிது என்று கருதிய கருணாநிதி, காலை உணவுக்கு பிறகு, சென்னை மெரீனா கடற்கரையில் மதிய உணவுக்கு முன் வரை உண்ணாவிரதம் இருந்தார். அப்போதே, இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டது என்று, மத்திய அமைச்சர் சிதம்பரம் தெரிவித்ததாகக் கூறி உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். போரும் ஓயவில்லை; இனப்படுகொலையும் தவிர்க்கப்படவில்லை.

இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, ஐ.நா.,வின் அறிக்கை இன்று வெளியிடப்பட உள்ளது. இலங்கை தமிழர்கள் படுகொலையை தவிர்க்கக் கூடிய வாய்ப்பு முதல்வர் கருணாநிதிக்கு மட்டுமே இருந்தது. இதை, கருணாநிதி செய்யவில்லை. ஆட்சி போனால் திரும்பப் பெறலாம்; போன உயிர் திரும்ப வராது. ஆனால், முதல்வர் கருணாநிதி தனது அணியை சேர்ந்த பார்லிமென்ட் உறுப்பினர்களை இலங்கைக்கு அனுப்பி, ராஜபக்ஷேவுடன் கை குலுக்க வைக்கிறார். இங்கிருந்து மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் உயிரோடு திரும்ப முடிவதில்லை. இலங்கை பிரச்னையில் கருணாநிதியின் நிலைப்பாடு என்னவென்பது தமிழக மக்களுக்கு தெரியாமலில்லை. பிறர் மீது பழி சுமத்தி தப்பித்துக் கொள்ளும் கருணாநிதியின் தந்திரம் இனி எடுபடாது.இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

சாய்பாபாவின் சரித்திரம்

பகவான் சத்ய சாய்பாபா, 1926ம் ஆண்டு நவ.23ம் தேதி ஆந்திராவின் புட்டபர்த்தியில் பிறந்தார். இவரது இயற்பெயர் சத்யநாராயண ராஜூ. இவரது பெற்றோர் ராஜூ ரத்னகரம், ஈஸ்வரம்மா ஆகியோர். ஒரு நாள் பாபாவின் தாயார் ஈஸ்வரம்மா கிணற்றில் நீர் இறைத்துக் கொண்டிருக்கும் போது, வானில் இருந்து வந்த சக்தி வாய்ந்த ஒளி அவரது வயிற்றில் புகுந்ததாகவும், அதன் பின் கருவுற்றதாகவும் கூறப்படுகிறது. இது ஒரு அதிசய நிகழ்வு என்று ஈஸ்வரம்மா தெரிவித்தார்.

குழந்தை பருவத்திலேயே நாடகம், இசை, நடனம், கதை எழுதுதல், பாடல் இசை அமைப்பு என பல துறைகளில் சாய்பாபா திறமையாக விளங்கினார். 1940 மார்ச் 8ம் தேதி தனது சகோதரருடன் இருக்கும் போது, தேள் ஒன்று சாய்பாபாவை கொட்டியது. இதையடுத்து சில மணி நேரங்கள் தன்நிலை மறந்தவராக இருந்தார். தொடர்ந்து சிரிப்பது, அழுவது, மவுனமாக இருப்பது போன்று இருந்தார். டாக்டர்கள் அவர் நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப் பட்டுள்ளார் என தெரிவித்தனர். மதகுருக்கள் உள்ளிட்டவர்கள் புட்டபர்த்தியில் இருந்த சாய்பா பாவின் உடலை பரிசோதித்தனர். 1940, மே 23ல் வீட்டில் இருந்த வர்களை அழைத்த சாய்பாபா, கைகளில் இருந்து கற்கண்டு வரவழைத்து காண்பித்தார். அவரது தந்தை, ""என்ன இது மாய மந்திரம்'' என கோபத்துடன் கேட்டார். அதற்கு சாய்பாபா, ""நான் யார் தெரியுமா? நான் தான் சாய்பாபா. ஷீரடி சாய்பாபாவின் மறுஜென்மம் நானே'' என்றும் கூறினார். (ஷீரடி சாய்பாபா 19வது நூற்றாண்டின் இறுதி முதல் 20ம் நூற்றாண்டின் தொடக்க காலம் வரை மகாராஷ்டிராவில் வாழ்ந்தவர்.

இவர் சாய்பாபா பிறப்பதற்கு 8 ஆண்டுகளுக்கு முன் இறந்தார்). சாய்பாபாவை தேடி பக்தர்கள் வர ஆரம்பித்தனர். சாய்பாபாவும் சென்னை உள்ளிட்ட தென் இந்தி யாவின் பல்வேறு இடங்களுக்குச் சென்று பக்தர்களுக்கு அருள் வழங்கினார். 1944ல் பக்தர்கள் அவருக்கு கோவில் கட்டினர். இந்த இடம் 100 ஏக்கர் பரப் பளவில் அமைந்துள்ளது. தற்போது பிரசாந்தி நிலையமாக விளங்குகிறது. இந்த ஆசிரமம் 1948ல் கட்டப் பட்டு 1950ல் நிறை வடைந்தது. 1954ல் சாய்பாபா, அங்கு சிறு மருத்து வமனையை நிறுவி, அப்பகுதி மக்களுக்கு இலவச மருத்துவ வசதி அளித்தார். 1957ல் வட இந்தியாவின் பல பகுதிகளின் கோவில்களுக்கு சாய்பாபா பயணம் செய்து அருளாசி வழங்கினார். வெளிநாடுகளில் உள்ளவர்களும் இவரது சக்தியை நம்பி பக்தர் களாக தொடர்ந்தனர்.

சாய்பாபா அதிசயம்: பக்தர்களால் "அவதாரம், கடவுள்' என அழைக்கப்பட்டவர் சாய்பாபா. லிங்கம், விபூதி, மோதிரம், வாட்ச் போன்றவற்றை வரவழைத்து மக்களை ஆச்சர்ய படுத்தினார். இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் ஆசிரமங்கள் மூலம் சமூக தொண்டு செய்தார். இவரது கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்கு கல்வியையும், ஒழுக்கத்தையும் போதிக்கிறது. இந்தியாவில் ஜனாதிபதி, பிரதமர், முதல்வர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் முதல் சாதாரண மக்கள் வரை, தனது அருளுரையால் ஈர்த்தார். 137 நாடுகளில் சாய்பாபாவுக்கு பக்தர்கள் உள்ளனர்.

இந்தியாவில் முக்கிய அரசியல் தலைவர்களான வாஜ்பாய், சங்கர்தயாள் சர்மா, நரசிம்மராவ், வெங்கடராமன், பி.டி. ஜாட்டி, எஸ்.பிரித்திவிராஜ் சவான், சந்திரசேகர், அர்ஜுன் சிங், ராஜேஷ்பைலட், சங்கரானந்த், பங்காரப்பா, வீரப்ப மொய்லி, சந்திரபாபு நாயுடு ஆகியோரும் இவரது பக்தர்கள். ரவிசங்கர், எம்.எஸ். சுப்புலட்சுமி, நானி பல்கி வாலா, டி.என். சேஷன், சுனில் கவாஸ்கர் உள்ளிட்ட பல்துறை அறிஞர்களும் இவரது பக்தர்களாக உள்ளனர்.1993 ஜூன் 6ல் சாய்பா பாவை கொல்ல நடந்த ¬முயற்சி சர்வதேச செய்தியானது. இதில் 6 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து சில சர்ச்சைகளும் எழுந்தன. ஆனால் சாய்பாபாவின் பொதுத் தொண்டுகள் அவரது மதிப்பை மக்கள் மனதில் மேலும் உயர்த்தின. ஒவ்வொரு நாளும் 30 நிமிடம் இவர் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் இவரது தரிசனத்தை பெறுகின்றனர்.

சமூகத் தொண்டு:ஆந்திராவில் உள்ள அனந்தபூர் மாவட்டத்தில் நிலவிய கடுமையான குடிநீர் பஞ்சம், பாபாவின் ரூ.200 கோடி திட்டத்தால் முடிவுக்கு வந்தது. அம்மாவட்டத்திலுள்ள 50 லட்சம் மக்கள் இன்றும் பயனடை கின்றனர். இத்திட்டம் 9 மாதங்களில் முடிக்கப்பட்டது. 2 ஆயிரத்து 500 கி.மீ. தூர குழாய்கள், 268 தண்ணீர் தொட்டிகள், 124 நீர்த்தேக்கங்கள், 200 நீரேற்று நிலையங்கள் ஆகியன 700 கிராமங் களுக்கும் 11 நகரங்களுக்கும் பயனளிக்கின்றன. இத்திட்டத்துக்கு ரூ.30 கோடி நிதியளிக்க மத்திய அரசு முன்வந்தபோதும் பாபா மறுத்துவிட்டார். அவரது 70வது பிறந்த நாளில் இத்திட்டம் செயலுக்கு வந்தது. சத்ய சாய் அமைப்பு ஏராளமான இலவச கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் மற்றும் தொண்டு நிறுவனங் களின் மூலம் சேவை செய்கிறது. உலகளவில் 114 நாடுகளில் 1,200 சத்ய சாய்பாபா மையங்கள் இயங்குகின்றன. தமிழகத்தின் தலைநகரான சென்னையின் குடிநீர் தாகத்தை போக்கும் வகையில் கிருஷ்ணா நதி நீரை தெலுங்கு கங்கை திட்டத்தின் மூலம் கொண்டுவர நிதியுதவி வழங்கினார்."அனைவரையும் நேசி, அனைவருக்கும் சேவை செய், எல்லோருக்கும் உதவு,எவரையும் வெறுக்காதே' இதுவே பகவான் சத்யபாபாவின் தாரக மந்திரம்.

சாய்பாபாவின் சேவைகள் : * சத்ய சாய் தனது பக்தர்களுக்காக நூற்றுக்கும் மேற்பட்ட சமூக சேவை நிறுவனங்களை நடத்தி வருகிறார். இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள 136 நாடுகளில் இவை இயங்கி வருகின்றன.
* சமூகம், கல்வி, மருத்துவம், குடிநீர் உள்ளிட்ட பல துறைகளில் இவரது பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
* பெங்களூருவில் உள்ள பாபாவின் ஆசிரமத்திற்கு அருகில் 2 கிலோ மீட்டர் தொலைவில் முதியோருக்காக "விருத்தாஸ்ரமம்' என்ற ஒன்று கட்டப்பட்டுள்ளது. இங்கு முதியவர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
* பாபா குறித்த நூல்கள், "சிடி'க்கள் என அனைத்தும் ஆஸ்ரம வளாகத்திலேயே விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
* பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக சத்யசாய் கோகுல ஆசிரமத்தில் 240 அறைகள் உள்ளன. இங்கு கட்டணமாக நாள் ஒன்றுக்கு ரூபாய் 150 மட்டும் வசூலிக்கப்படுகிறது.
* ஆந்திராவில் உள்ள அனந்தபூர், வடக்கு கோதாவரி மற்றும் கிழக்கு கோதாவரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு ஒரே ஆண்டில் அம்மாவட்டங்களில் உள்ள பகுதிகளுக்கு குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்தார்.
* உலக அமைதி மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தி பாபா அவர்கள் புட்டபர்த்தி மட்டுமல்லாமல் கர்நாடக மாநிலம் முழுவதும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வந்தார்.
* ஒயிட்பீல்டு ஆசிரமம் அருகே சத்யசாய் மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்ட படுக்கைகளுடன் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இங்கு சிகிச்øகாக வரும் நோயாளிகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது.
* இதே போன்று, சத்யசாய் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவமனையின் உதவியுடன் இதயம் மற்றும் நரம்பு தொடர்பான கொடிய நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மொத்தம் 52 ஏக்கரில் இம்மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 333 படுக்கைகள், 12 அறுவை சிகிச்சை கூடங்கள், ரத்தவங்கிகள், ஆய்வுக்கூடங்கள் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன.
* சென்னை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த தெலுங்கு கங்கை திட்டத்தை சரி செய்து தீர்வு வழங்கியது சாய் பாபாவின் சாயி மத்திய அறக்கட்டளை.
* நாட்டில் இயற்கை பேரழிவு ஏற்படும் சமயங்களில் அப்பகுதியில் உள்ள சாயி அறக்கட்டளையை சேர்ந்தவர்கள் உதவிகள் செய்கின்றனர்.

""எனக்காக ஒரு சொட்டுக் கண்ணீர் விடு'' : 1976ல் நடந்த நிகழ்ச்சி இது. சாய்பாபா பிருந்தாவனத்தில்(சாய்பாபாவின் இருப்பிடம்) இருந்தார். இன்ஜினியர்கள் சில கட்டடத் திட்டங்களை வைத்துக் கொண்டு அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தனர். சாய்பாபா அங்கிருந்த மாணவர்களைப் பார்த்து, ""டியர் பா#ஸ், உங்களுக்காக ஒரு ஹாஸ்டலை கட்ட ஏற்பாடு செய்திருக்கிறேன். அது வசதியான அறைகள் கொண்டதாக இருக்கும்,'' என்றார்.

ஒரு மாணவர் பாபாவை நோக்கி, ""சுவாமி! நாங்கள் இங்கு சுகமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறோம். புதிய ஹாஸ்டல் எங்களுக்குத் தேவையில்லை. இந்த பிருந்தாவனமே எங்களது இல்லம்'' என்றார். ""அன்புள்ள குழந்தைகளே! பிருந்தாவன் உங்களது என்று சொல்வது சரியே. அதே சமயத்தில் சிறுவர்களாகிய நீங்கள் இடம் போதாமல் முடங்கிக் கிடப்பதைப் பார்த்து என் மனம் பொறுக்கவில்லை. உங்களுக்கு வசதி செய்து தருவது தான் என் கடமை. வரும் வியாழன் அன்று புதிய ஹாஸ்டலுக்கான அடித்தளம் போடப்படும்'' என்று சொல்லிவிட்டு தரிசனத்திற்காக காத்திருந்த பக்தர்களுக்கு ஆசி அளிக்க கிளம்பினார்.
அடுத்த இரண்டுநாட்களுக்குள் அடித்தளமிடும் பூமிபூஜை நடக்க இருந்தது. இன்ஜினியர்கள் சுறுசுறுப்பாக வேலை செய்தார்கள். மாணவர்களுக்கு இச்செயல் பிடிக்கவில்லை. அடுத்தநாள் ஹாஸ்டலுக்கு பாபா வந்தபோது, வயதில் சிறிய மாணவன் ஒருவன், பாபாவின் கையில் ஒரு கடிதத்தைத் தந்தான். அவர் அதைப் படித்து விட்டு சிரித்து விட்டார். வார்டனை வரச் சொல்லி அதை உரக்கப் படிக்குமாறு கூறினார். அதில் கீழ்க்கண்டவாறு இருந்தது.

""அன்பு மிக்க சாயி அம்மா! தங்களின் மலர்ப்பாதங்களுக்கு எங்கள் பணிவான வணக்கம். தங்களுக்கு எங்களிடம் வருத்தமா? தங்களின் அமைதியை நாங்கள் கெடுக்கிறோமா? ஒழுக்கவிதிகளை மீறி கட்டுப்பாடின்றி நடக்கிறோமா? அவ்வாறு இல்லாவிட்டால் பிருந்தாவனத்தின் எல்லையை விட்டு எங்களை ஏன் அனுப்ப முயற்சி செய்ய வேண்டும்? மிகவும் ரம்மியமான இந்த பிருந்தாவனத்தில் தான் நாங்கள் இனிமையையும், அன்பையும், பாதுகாப்பையும் நெருக்கமாக நாங்கள் உணர்கிறோம். வானுலக தேவர்கள் கூட இந்த அன்பை, ஆனந்தத்தை அனுபவிக்க ஆசைப்படுவார்கள்.''
இதயம் நிறைந்த பாசத்துடன் தங்கள் குழந்தை

பின்குறிப்பு: பிருந்தாவனத்தில் இருந்து வெகு தூரத்தில் புதிய ஹாஸ்டல் கட்டவேண்டும் என்று தாங்கள் உறுதியாக இருந்தால், தயவு செய்து தங்களுக்கும் ஒரு புதிய இல்லம் அமைத்துக் கொண்டு எங்களுக்கு மிக அருகிலேயே இருக்க வேண்டுகிறோம். வார்டன் இக்கடிதத்தைப் படித்து முடித்ததும், கண்ணீர் விடாத மாணவர்கள் யாருமே இல்லை. ஒரே குரலில் அனைவரும், ""சுவாமி! தயவு செய்து எங்கள் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளுங்கள்'' என்று கெஞ்சினர். இதைக் கண்டு பாபாவின் உள்ளம் உருகியது. அவர் உடனே தலைமை இன்ஜினியரை அழைத்து, வரைபடங்களை வேறு மாதிரி வரையும்படி கேட்டுக் கொண்டார்.
பிருந்தாவன பகுதிக்குள்ளேயே புதிய ஹாஸ்டலைக் கட்டுவதற்கான வரைபடங்கள் தயாரிக்கப்பட்டன. இந்த பரபரப்பான செய்தியைக் கேட்டதும் மாணவர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். பூமிபூஜை நாளன்று ஆரத்திக்கான விளக்கை ஏற்றும்போது மாணவன் ஒருவன், ""சுவாமி! நீங்கள் எங்களுக்காக எவ்வளவோ செய்கிறீர்கள். தங்களுக்குக் கொடுக்க எங்களிடம் ஒன்றும் இல்லையே!'' என்ற சொல்லி கண்ணீர் விட்டான். அதற்கு பாபா""ஆனந்தக் கண்ணீர், உன் மிருதுவான கன்னத்தில் வழிகிறதே! அது போதாதா? எனக்கு வேண்டியது அதுவே! எனக்காக ஒரு சொட்டுக் கண்ணீர் சிந்து! நான் மிகவும் விரும்புவது உன் மகிழ்ச்சி மட்டுமே!'' என்றார். பிருந்தாவன் அமைப்பில் உள்ள உயர்ந்த கட்டிடம் பாபா மாணவர்கள் மீது கொண்டுள்ள அளவற்ற அன்புக்கு ஒரு இனிய நினைவுச் சின்னம்.

பிறப்பும் இறப்பும் எனக்கில்லை : ஒருமுறை பிறந்த நாள் விழாவில் சத்யசாய்பாபா சார்பில் ஒரு செய்தியை சாய்பக்தர் ஒருவர் வாசித்தார். அதில், ""இந்த உடலுக்கு பிறப்போ இறப்போ கிடையாது. ஆனால், நீங்கள் எனக்கு அன்பின் காரணமாக விழா எடுக்கிறீர்கள். ஆம்...அன்பே உலகில் மிக உயர்ந்த சக்தி. இங்கே அனைவரும் ஒன்று கூடி சகோதர, சகோதரிகளாக அமர்ந்துள்ளீர்கள். உலகத்தில் சாந்தி ஏற்பட நாம் முயற்சிக்க வேண்டும். குறுகிய உணர்வைக் கொன்றுவிட்டு ஒற்றுமையையும், கூட்டுறவையும் வளரச் செய்தால் அதுவே உண்மையான மனிதத்தன்மையாகும்,'' என்று கூறப்பட்டிருந்தது.

""துயரத்தைத் தாங்கும் சக்தியைத் தருகிறேன்'' அன்றே சொன்னார் சத்யசாய்பாபா : ராமபிரானைப் பற்றி நூற்றுக்கணக்கான புத்தகங்கள் எழுதிய ராமசரண் என்ற பண்டிதர் பாபாவின் பக்தர். அவர் உடல் உபாதைகளால் அவதிப்பட்டார். ராமசரணின் நண்பர்கள் பாபாவிடம் சென்று நிவாரணம் பெற்றுவரும்படி வற்புறுத்தினார்கள். ஆனால், "வினைப்பயனை அனுபவித்துக் கழிப்பதே நல்லது' என்றார் ராமசரண். ராமசரண் படும் இந்த துன்பம் குறித்து பாபா ஒருமுறை குறிப்பிட்டார். ""கடவுள் எப்போதும் காப்பாற்ற மாட்டார் மற்றும் தண்டனையும் அளிக்கமாட்டார். நீங்கள் அனுபவிக்கும் அனுபவங்கள் ஒவ்வொன்றும் நான் உங்களுக்கு அளித்த பரிசுகள். அவைகள் என்னால் உண்டாக்கப்பட்டவையல்ல. அவைகளை உருவாக்குபவர்கள் நீங்களே,'' என்றார். ""அப்படியானால் துன்பங்களை நீக்க கடவுளின் பங்குதான் என்ன? என்றார் ஒரு பக்தர்.அதற்கு பதிலளித்த பாபா ""நான் உங்களுக்கு துயரத்தைத் தாங்கிக் கொள்ளும் வலிமை அளிக்கிறேன். தூக்கமுடியாமல் சில்லரைக் காசு மூடையைச் சுமந்து வருபவனிடம் ரூபாய் தாளாக மாற்றித் தந்தால் சுமை எப்படி குறையுமோ, அதுபோல துயரங்களைச் சுமந்து வருபவனின் சுமையை குறைத்து லேசாக்கிவிடுகிறேன். அப்போது துயரச்சுமை உன்னை அழுத்துவதில்லை'' என்றார்.

புட்டபர்த்தியில் சாய்பாபாவுக்கு அஞ்சலி, குவிகின்றனர் பக்தர்கள்

புட்டபர்த்தி பகவான் சத்ய சாய்பாபா (85), நேற்று காலை ஸித்தியடைந்தார். அவரது உடலை தரிசிக்க, லட்சக்கணக்கான பக்தர்கள் பிரசாந்தி நிலையத்தில் குவிந்துள்ளனர். வரும் 27ம் தேதி அவரது உடல், சமாதியில் அடக்கம் செய்யப்பட உள்ளது. ஆந்திர அரசு இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.
ஆன்மிக தலைவராக இருந்து கொண்டு, எண்ணற்ற சமூக சேவைகளை ஆற்றியவர் சாய்பாபா. உலகம் முழுவதும் பல கோடி பக்தர்களை கொண்ட சாய்பாபாவின் உடல் நிலை, கடந்த மாதம் 28ம் தேதி மோச மடைந்தது. அவரது இருதயம், சிறுநீரகம், கல்லீரலின் செயல்பாடுகள் படிப்படியாக குறைந்து, நேற்று செயலிழந்தன. அனந்தப்பூர் மாவட்டத்தில் உள்ள சத்தியசாய் உயர் மருத்துவ அறிவியல் மையத்தில், அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. கடந்த ஒரு வாரமாக அவருக்கு செயற்கை சுவாசம் செலுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று காலை 7.40 மணிக்கு அவர் ஸித்தியடைந்தார்.

சத்தியசாய் மருத்துவமனையின் இயக்குனர் ஏ.என்.சபையா, சாய்பாபாவின் இதயம் மற்றும் நுரையீரல் முற்றிலும் தன் செயல்பாடுகளை நிறுத்தி விட்டதாக, நேற்று காலை அறிவித்தார். அவர், "பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா அவர்கள் பூத உடலை நீக்கி, விண்ணுலகம் சென்றார். இதயம் மற்றும் நுரையீரல் செயலிழந்து விட்டது' என்றும் தெரிவித்தார்.

சாய்பாபாவின் மறைவு செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பிரதமர், ஜனாதிபதி, மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், திரையுலக பிரமுகர்கள், விளையாட்டு வீரர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அனந்தப்பூர் மாவட்டம் புட்டபர்த்தியில் உள்ள பிரசாந்தி நிலையத்தின் சாய் குல்வந்த் ஹாலில், சாய்பாபாவின் உடல் வைக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை 6 மணி முதல் பக்தர்கள் தரிசிக்க அனுமதியளிக்கப்பட்டது. முன்னதாக, அவர் வழக்கமாக வலம்வரும் பிரசாந்தி நிலையத்தில் வைக்கப்பட்டது. இதையடுத்து, சாலையின் இருபுறமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நின்று, சாய்பாபாவை தரிசிக்க காத்திருந்தனர்.

மாநில தொழில்துறை அமைச்சர் கீதா ரெட்டி குறிப்பிடுகையில், "சத்திய சாய் அறக்கட்டளை நிர்வாகிகள் தான் பாபாவின் உடலை சமாதியில் அடக்கம் செய்வது குறித்த ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். அடுத்த இருநாட்களுக்கு (திங்கள், செவ்வாய்க்கிழமை) சாய்பாபாவின் உடல் பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் தரிசனத்துக்காக வைக்கப்பட்டிருக்கும். மாநில அரசு நான்கு நாட்களுக்கு துக்கம் அனுஷ்டிக்கிறது' என்றார்.

கடந்த 1926ம் ஆண்டு சத்திய நாராயண ராஜு என்ற இயற்பெயருடன் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த குடும்பத்தில் பிறந்தார். ஷீரடி சாய்பாபாவின் மறு அவதாரம் தான் நான் என கூறி வந்த சாய்பாபா, ஆன்மிக பணியுடன் ஏராளமான கல்வி, சுகாதார பணிகளை ஆற்றி வந்தார். கையை அசைத்து லிங்கம், மோதிரம், விபூதி போன்ற பொருட்களை வரவழைத்து பக்தர்களை ஆசீர்வதிப்பது உண்டு. புட்டபர்த்தி பகுதி எல்லா வளத்துடன் இருக்க அவர் ஆற்றிய சமுதாயப் பணிகள் ஏராளம்.அவர் ஆற்றிய பணிகளை, தொடர்ந்து அறக்கட்டளை ஆற்றும் என, மாநில முதல்வர் கிரண்குமார் ரெட்டி நம்பிக்கை தெரிவித்துள்ளார். பாபாவின் உடல் பிரசாந்தி நிலையத்தில் உள்ள குல்வந்த் ஹாலில், சமாதியாக வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

நான்கு நாட்கள் துக்கம் : நான்கு நாட்களுக்கு மாநிலம் முழுவதும் துக்கம் அனுஷ்டிக்கப்படும் என, அறிவித்துள்ளார் கிரண்குமார் ரெட்டி. புதன் கிழமையன்று அனந்தப்பூர் மாவட்டத்துக்கு அரசு விடுமுறை அறிவித்துள்ளது. பாபாவின் இறுதிச் சடங்குகள் அரசு மரியாதையுடன் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.சாய்பாபா மருத்துவமனையில் இருந்த போதே அவரை பார்க்க, ஆயிரக்கணக்கான பக்தர்கள், புட்டபர்த்தியில் குவிந்தனர். ஆனால், பாபாவை பார்க்க அவர்களுக்கு அனுமதியளிக்கப்படவில்லை. இதனால், பக்தர்கள் பலர் ஏமாற்றமடைந்தனர். எனவே, புட்டபர்த்தியில் 6 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது, பாபாவின் உடலை தரிசிக்க லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்துள்ளதால் கூடுதல் பாதுகாப்புக்கு, மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது. பாபாவின் மறைவையொட்டி, புட்டபர்த்தியில் கடைகளும், வர்த்தக நிறுவனங்களும் அடைக்கப்பட்டுள்ளன.ஆன்மிக பணியுடன் மக்கள் சேவையை ஆற்றி, உலக வரைபடத்தில் புட்டபர்த்தியை இடம்பெற செய்த மகானின் சகாப்தம் நிறைவடைந்ததைக் கண்டு, மக்கள் பாபாவுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கின்றனர்.தனது தூய்மையான சமூக பணியின் மூலம் பலரையும் கவர்ந்தவர் பாபா. தனி விருப்பின்றி சமுதாய சேவை ஆற்றிய அவர், அன்பின் திருவுருவாக வழிகாட்டிய சகாப்தம் முடிந்தது என்று பக்தர்கள் பலரும் கருத்து தெரிவித்தனர். ஆனாலும், அவர் காட்டிய வழியில் தொண்டு தொடரும் என்றும் கூறினர்.

தனிப்பட்ட முறையில் தங்களுக்கு அவர் ஆசி வழங்கி, வாழ்வில் வசந்தம் ஏற்பட்டதைக் கூறி புகழாரம் சூட்டி, அங்கே பக்தர்கள் குவிந்துள்ளனர்.வெளிநாட்டு பக்தர்கள் பலர் விமானம் மூலம் பாபாவை தரிசிக்க வந்த வண்ணம் உள்ளனர். இதற்காக, கூடுதல் விமான சேவைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அத்துடன், உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பிரமுகர்கள் அஞ்சலி செய்தி அனுப்பியவண்ணம் உள்ளனர்.

சாய் வாக்கு சத்ய வாக்கு:" 95 வயது வரை வாழ்வேன்" என்று சத்ய சாய் பாபா ஏற்கனவே கூறியிருந்தார். இதனால்தான் மார்ச் மாதம் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது, "பாபாவுக்கு ஒன்றும் நேராது; அவர் உடல்நிலை தேறி மீண்டு வருவார்" என்று பக்தர்கள் நம்பிக்கை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் சாய் பாபா தற்போது ஸித்தி அடைந்தது எப்படி என்று சில பக்தர்கள் மனதில் ஐயம் எழலாம்.

இது குறித்து சாய் பாபாவின் தீவிர பக்தர் ஒருவர் விளக்குகையில், "நாம் ஆங்கில முறைப்படி ஆண்டுகளைக் கணக்கிட்டு, சாய் பாபாவுக்கு தற்‌போது வயது 86 என்று கூறுகிறோம். ஆனால் ஹிந்து முறைப்படி சந்திரனை அடிப்படையாக கொண்டே ஆண்டு நிர்ணயிக்கப்படுகிறது. அதாவது ஆங்கில முறைப்படி ஒரு மாதம் என்பது 30 அல்லது 31 நாட்கள். ஆனால் ஹிந்து முறைப்படி பூமியை சந்திரன் ஒருமுறை சுற்றி வரும் காலம்தான் ஒரு மாதம் என கணக்கிடப்படுகிறது. சந்திரன் ஒருமுறை பூமியைச் சுற்றி வர 27.3 நாட்கள்தான் ஆகிறது. அந்த அடிப்படையில் கணக்கிட்டால் சாய் பாபாவுக்கு தற்போது வயது 94 ஆகிறது. மேலும் ஹிந்து வழக்கப்படி அவர் பிறந்த ஆண்டே முதல் வயதாக கருதப்படுவதால் சாய் பாபாவுக்கு 95 ஆகிறது. எனவே சாய் பாபா தமது ஆயுள் குறித்து தெரிவித்த வாக்கு பொய்க்கவில்லை; சாய் வாக்கு சத்ய வாக்காக‌வே இருக்கிறது" என்று தெரிவித்தார்.

ஸ்பெக்ட்ரம் வழக்கில் இன்று இரண்டாவது குற்றப்பத்திரிகை: தி.மு.க.,வுக்கு நெருக்கடி

"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த ஊழல் குறித்தான வழக்கில், இன்று இரண்டாவது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுகிறது. இதில், முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு, மகள் கனிமொழி ஆகியோரின் பெயர்கள் இடம் பெறும் என்ற பரபரப்பு அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாக, மத்திய அரசுடனான தி.மு.க.,வின் உறவு நிலை என்ன என்பது இன்று தெரியும். உச்சகட்ட எதிர்ப்பாக தி.மு.க., மத்திய அரசில் இருந்து தன் அமைச்சர்களை வாபஸ் பெறும் நிலையும் ஏற்படலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது.

"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பாக, விசாரணை நடத்தி வரும் சி.பி.ஐ., 17 மாதங்களுக்கு பின், தனது முதல் குற்றப் பத்திரிகையை, கடந்த 2ம் தேதி தாக்கல் செய்தது. மொத்தம் 80 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகையில், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, அவரின் அப்போதைய தனிச் செயலர் சந்தோலியா, தொலைத்தொடர்புத் துறை முன்னாள் செயலர் சித்தார்த் பெகுரா, சுவான் டெலிகாம் புரமோட்டர் ஷாகித் பல்வா, சுவான் டெலிகாம் இயக்குனர் விவேக் கோயங்கா, யுனிடெக் ஒயர்லெஸ் இயக்குனர் சஞ்சய் சந்திரா, அனில் திருபாய் அம்பானி குரூப் நிறுவனங்களின் அதிகாரிகள் கவுதம் டோஷி, சுரேந்திர பிபாரா மற்றும் ஹரி நாயர் ஆகிய ஒன்பது பேர் மீது, சதி செய்தது மற்றும் மோசடிக்கு உதவியாக இருந்தது உட்பட, இந்திய தண்டனைச் சட்டத்தின் பல பிரிவுகளில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.முன்னாள் அமைச்சர் ராஜா மற்றும் அரசு அதிகாரிகள், சுவான் புரமோட்டர் பல்வா ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தனர்.குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்ட தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களைச் சேர்ந்த ஐந்து உயர் அதிகாரிகளுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சி.பி.ஐ., இரண்டாவது குற்றப் பத்திரிகையை இன்று தாக்கல் செய்ய உள்ளது.

அரசுக்கு சேர வேண்டிய வருவாயை மறைத்து, தனிப்பட்ட நபர்கள் தங்களின் சுய லாபத்துக்காக கோடிக்கணக்கில் சுரண்டியுள்ளனர். இப்படிப்பட்டவர்கள் எப்படி ஒதுக்கீடு பெற்றனர், எவ்வித மோசடிகளை செய்திருந்தனர் என்ற தகவல்கள் முதல் குற்றப்பத்திரிகையில் இடம் பெற்று இருந்தன.இதைத் தொடர்ந்து, ஒதுக்கீடு செய்து கொடுப்பதற்காக யார் யாரெல்லாம் எந்த வகையில் செயல்பட்டனர்; இதில் கிடைத்த கோடிக்கணக்கான பணம் எப்படியெல்லாம் கைமாறியது; அதை எங்கே முதலீடு செய்துள்ளனர் என்ற விவரம் இரண்டாவது குற்றப்பத்திரிகையில் இடம் பெற உள்ளது.ஏனெனில், இப்பணியில் அமலாக்கத்துறை உதவியையும் சி.பி.ஐ., நாடி தகவல் கேட்டது. இதனால், பலரும் கதிகலங்கி ÷ பாய் உள்ளனர். இந்த வரிசையில், "2ஜி' ஒதுக்கீட்டில் ஆதாயம் பெற்ற சுவான் நிறுவனத்தின் அங்கமான சினியுக் நிறுவனத்திற்கும், கலைஞர் "டிவி'க்கும் இடையே நடந்த 214 கோடி ரூபாய் பணப் பரிமாற்றம், குற்றப் பத்திரிகையில் இடம் பெற உள்ளது.

சினியுக் நிறுவனத்திடமிருந்து கடனாக பெறப்பட்ட தொகை திருப்பிச் செலுத்தப்பட்டு விட்டது என்று, கலைஞர் "டிவி' தரப்பில் இருந்து விசாரணையின் போது தெளிவாக தெரிவிக்கப்பட்டு விட்டது. கடன் கொடுத்தனரா, திருப்பிச் செலுத்திவிட்டனரா என்பது பற்றி பிறகு பார்த்துக் கொள்வோம். ஒதுக்கீட்டில் கிடைத்த முறைகேடான பணம் எப்படி கலைஞர் "டிவி'க்கு போய் சேர்ந்தது என்பதற்கும், கடன் போல ஆவணங்களெல்லாம் எப்படி திரித்துக் காட்டப்பட்டுள்ளது என்பதற்கும் தங்களிடம் ஆதாரம் உள்ளதாக சி.பி.ஐ., கூறுகிறது.இந்த பரிமாற்றத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை நடந்த விஷயங்களையெல்லாம் தொகுத்து யார், யாரெல்லாம் எப்படி சம்பந்தப்பட்டுள்ளனர் என்பது குற்றப்பத்திரிகையில் இடம் பெறும் என்று கூறப்படுகிறது. எனவே, கலைஞர் "டிவி'யில் பங்குதாரராக உள்ள கனிமொழி, தயாளு மற்றும் இயக்குனர் சரத்குமார் ஆகியோரது பெயர்கள் இடம் பெற உள்ளன.

இது தொடர்பாக, அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை விவரங்களும், குற்றப் பத்திரிகையில் இடம் பெற உள்ளது என்ற பரபரப்பு எழுந்திருக்கிறது. கலைஞர் "டிவி'யில் இவர்கள் இருவரும் 80 சதவீத பங்கு வைத்திருக்கின்றனர். சரத்குமாருக்கு 20 சதவீத பங்குள்ளது. இவர்கள் பெயர்கள் இடம் பெற்றால், அடுத்ததாக கைது படலம் தொடரும் என்பதால், தி.மு.க., தரப்பில் பரபரப்பு நிலவுகிறது. இருப்பினும் ஏற்கனவே முதல் குற்றப் பத்திரிகையில் இடம் பெற்ற சிலர் கோர்ட் வரை சென்று, கைதை தவிர்த்துள்ளனர்.முன்னாள் அமைச்சர் ராஜாவின் நெருங்கிய நண்பரான மறைந்த சாதிக் பாட்சாவின் முக்கிய பங்கு குறித்து, இரண்டாவது குற்றப் பத்திரிகையில் இடம் பெறலாம்.

இந்நிலையில், மத்திய அரசுடனான தி.மு.க.,வின் நிலை குறித்து முடிவு செய்யப்படும் சூழ்நிலையை தி.மு.க., சந்திக்க நேரிடும் என தெரிகிறது. அந்த நிலையில், மத்தியில் உள்ள தன் ஆறு அமைச்சர்களை ராஜினாமா செய்யச் சொல்லி தி.மு.க., மேலிடம் முடிவு செய்யலாம். அந்த நிர்பந்தத்தை தரக்கூடிய சூழ்நிலையை இரண்டாவது குற்றப்பத்திரிகை தாக்கல் ஏற்படுத்தலாம் என்ற பேச்சு எழுந்திருக்கிறது

Sunday, April 17, 2011

காங்., வேட்பாளர் தேர்வில் பணம்

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலரும், நாமக்கல் எம்.எல்.ஏ.,வுமான ஜெயக்குமார், டில்லி காங்கிரஸ் வட்டாரத்தில் செல்வாக்கு உள்ள தமிழக காங்கிரஸ் பிரமுகர். தி.மு.க., வுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச, காங்கிரஸ் தலைமை நியமித்த ஐவர் குழுவில் இடம் பிடித்தவர். தற்போது மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடும் ஜெயக்குமார், மனதில் பட்டதை, மறைக்காமல் பேசக்கூடியவர். தமிழக காங்கிரசின் தற்போதைய குளறுபடி குறித்து கேட்டபோது, அவரது பேச்சில் காரமும், வேகமும், ஆதங்கமும் ஒருசேர எதிரொலித்தது. இனி அவரது பேட்டி:
காங்கிரசில் இப்போது நடக்கும் குளறுபடிகளுக்கு யார் காரணம்?
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு தான் காரணம். அவருடைய செயல்பாடுகள் அனைத்தும், காங்கிரஸ் கட்சியின் நன்மைக்கும், வளர்ச்சிக்கும் எதிராகவே இருக்கிறது.
எஸ்.வி.சேகர் எம்.எல்.ஏ., முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன் உட்பட 19 பேரை கட்சியிலிருந்து தங்கபாலு நீக்கியுள்ளாரே?
அவர்களை நீக்க தங்கபாலுவுக்கு எவ்வித அதிகாரமும் இல்லை. கட்சி ரீதியான நடவடிக்கை எடுக்க அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி விதி, "19 எப் 5' தெளிவாக உள்ளது. இதன்படி, மாநில அளவில், கட்சி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க, குமரிஅனந்தன் தலைமையிலான குழு உள்ளது. அகில இந்திய அளவில், கட்சி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க அமைச்சர் அந்தோணி தலைமையிலான குழு உள்ளது.
இதன் அடிப்படையில், தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள 19 @பர் மீது குமரிஅனந்தன் தலைமையிலான குழு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவும், 15 நாள் நோட்டீஸ் அனுப்பி, அதற்கு பதில் பெற்று, அந்த பதில் திருப்தி இல்லை என்றால் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுபோன்ற, நடைமுறைகள் எதுவும் எஸ்.வி.சேகர், கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட 19 பேர் நீக்கத்தில் பின்பற்றப்படவில்லை. அதிகாரமே இல்லாமல், தங்கபாலு அவர் இஷ்டத்துக்கு செயல்பட்டுள்ளார்.
அவர்கள் மீது திடீரென்று நடவடிக்கை எடுக்க என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?
அது தான் புரியவில்லை. ஓட்டுப் பதிவு நடைபெறும் வரை காத்திருந்துவிட்டு, உடனடியாக அவர்களை நீக்கியுள்ளார். இந்த நடவடிக்கையை எதிர்க்காமல் மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், வாசன் போன்றவர்களும் மவுனமாக இருக்கின்றனர்.
கூட்டணிக் கட்சிகளுடன் பேச அமைக்கப்பட்ட ஐவர் குழுவில் தங்கபாலுவின் செயல்பாடுகள் எப்படி இருந்தன?
தி.மு.க.,வுடன் தொகுதிப் பங்கீடு முடிந்ததும், ஐவர் குழுவை புறந்தள்ளிவிட்டு தங்கபாலு செயல்படத் துவங்கிவிட்டார். வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில், ஐவர் குழுவை அவர் கண்டு கொள்ளவே இல்லை.
காங்கிரஸ் சட்டŒபை குழு உறுப்பினர் ஒருவரை, வேட்பாளர்களை தேர்வு செய்யும் குழுவில் நியமித்து, முறையான தேர்வு நடத்தி, தலைமைக்கு அனுப்பலாம் என்று சிதம்பரம், வாசனிடம் சொன்னேன். அவர்கள் அதற்கு எதுவும் செய்யவில்லை. இதனால், தங்கபாலு அவர் இஷ்டம் போல் நடந்து கொண்டார். அதனால், பல குளறுபடிகள் காங்கிரசில் ஏற்பட்டுள்ளது. இதற்கு சிதம்பரமும், வாசனும் பொறுப்பேற்க வேண்டும்.
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெருமளவில் பணம் விளையாடியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதே?
நானும் இந்த குற்றச்சாட்டை அறிவேன். மார்ச் 21 அல்லது 22ம் தேதி என்று நினைக்கிறேன். எனக்கு ஒரு போன் வந்தது. அதில், திரு.வி.க., நகர் வேட்பாளரை மாற்றம் செய்துள்ளார்கள். இதற்கு, கணிசமான பணம் கைமாறியுள்ளது என்று கூறினர். இதை உடனே உறுதி செய்ய களத்தில் இறங்கினேன். போனில் வந்த தகவல் உண்மைதான் என்று தெரிந்து கொண்டேன்.
யாருக்கு பணம் கைமாறியது? எவ்வளவு கைமாறியது?
தமிழகத்தில் உள்ள ஒரு முக்கியப் புள்ளிக்கு கைமாறியது. அது கணிசமான தொகை.
யார் அந்த நபர்? காங்கிரஸ் கமிட்டித் தலைவர் தங்கபாலுக்கு அதில் பங்கு உள்ளதா?
யார் அந்த நபர் என்று பெயரை சொல்ல முடியாது. தங்கபாலுவுக்கு அதில் தொடர்பு உள்ளதா? என்று எனக்கு தெரியாது.
இந்த குளறுபடிகளால் காங்கிரசுக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளதா?
காங்கிரஸ் நூற்றாண்டு அனுபவம் உள்ள கட்சி. இதற்கு, சில தலைவர்களால் களங்கம் ஏற்படுத்த முடியாது.
காங்கிரசின் தேர்தல் பணி எப்படி இருந்தது?
காங்கிரசின் தலைவர்களுக்கு தேர்தல் பிரசாரம் செய்வதற்கான எந்த திட்டங்களையும், மாநில காங்கிரஸ் செய்து தரவில்லை. சிதம்பரம், வாசன் போன்றவர்கள் அவர்களாகவே பிரசாரங்களைச் செய்து கொண்டனர். எந்தவிதமான ஒருங்கிணைப்பையும் மாநில காங்கிரஸ் கமிட்டி செய்யவில்லை.
இவ்வளவு நடந்தும், மாநில அளவிலான தலைவர்கள் எதையும் கண்டு கொள்ளவில்லையே?
தங்களுக்கு கிடைக்க வேண்டியது கிடைத்து விட்டதால் அவர்கள் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்களோ? என தெரியவில்லை. தேர்தல், அதையொட்டி நடந்த சம்பவங்கள் குறித்து சோனியாவுக்கு விரிவான அறிக்கையை தாக்கல் செய்வேன்.
தேர்தலில், தி.மு.க., தலைமையிலான கூட்டணிக்கு, காங்கிரசால் பின்னடைவு ஏற்பட்டால், தி.மு.க.,வுக்கு காங்கிரஸ் மீதுள்ள நல்லெண்ணம் குறையுமா?
காங்கிரசால் பின்னடைவு ஏற்பட்டால், அந்த அணுகுமுறை ஏற்படலாம்.

தலைநகரம் யாருக்கு? : ஓட்டுப்பதிவு உண்மைகள்

சென்னை மாவட்டத்தில், 14 சட்டசபை தொகுதிகள் இருந்தன. தொகுதி சீரமைப்பில், புரசைவாக்கம், பூங்கா நகர் தொகுதிகளின் பெயர்கள் மாற்றப்பட்டு, திரு.வி.க., நகர், கொளத்தூர், வேளச்சேரி மற்றும் விருகம்பாக்கம் ஆகிய நான்கு தொகுதிகள் புதியதாக உருவாக்கப்பட்டு, 16 சட்டசபை தொகுதிகளாக உயர்த்தப்பட்டது.
சென்னை மாவட்டத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை, 31 லட்சத்து 71 ஆயிரத்து 580. இதில், 11 லட்சத்து 4,146 பேர் ஆண்களும், 10 லட்சத்து 53 ஆயிரத்து 237 பெண்களும் ஓட்டுப்பதிவு செய்துள்ளனர். சென்னை மாவட்ட தொகுதிகளில் பதிவாகியுள்ள ஓட்டு சதவீதம் வெற்றி, தோல்வி குறித்த சில உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளது.
அது குறித்த விவரம்:
ராதாகிருஷ்ணன் நகர்: தி.மு.க., சார்பில் சேகர்பாபு, அ.தி.மு.க., சார்பில் வெற்றிவேல் உட்பட, 31 பேர் போட்டியிட்டனர். இந்த தொகுதியில் 70 ஆயிரத்து 457 ஆண்களும், 70 ஆயிரத்து 810 பெண்களும் ஓட்டுப்பதிவு செய்துள்ளனர். ஆண்களை விட பெண்கள் அதிகளவில் ஓட்டுப்பதிவு செய்திருப்பதால், சுயஉதவிக் குழுக்களின் ஆதரவு தி.மு.க.,விற்கு கிடைக்க வாய்ப்புள்ளது.
கடந்த தேர்தலில், 18 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சேகர்பாபு, கட்சி மாறி தி.மு.க., சார்பில் போட்டியிடுவதால், அந்த ஓட்டுகள் இவருக்கு கிடைத்திருக்குமா என்ற சந்தேகம் எழுகிறது. ஓட்டுப்பதிவு அன்று, ஒரு மூதாட்டி சேகர்பாபுவை சந்தித்து, "பாபு உனக்கு ஓட்டுப் போட்டுட்டேன் பா, இரட்டை இலை சின்னத்தில் தான் பா போட்டேன்' என்று கூறியதை கேட்டு, சேகர்பாபு உட்பட சுற்றியிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுபோன்ற வாக்காளர்களின் ஓட்டுகள் சேகர்பாபுவுக்கு பலவீனமாக உள்ளது.
பெரம்பூர்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில், சவுந்தரராஜன், தி.மு.க., சார்பில் தனபாலன் உட்பட, 20 பேர் போட்டியிட்டனர். கம்யூனிஸ்ட் வசம் உள்ள தொகுதி, கடந்த தேர்தலில் மகேந்திரன் 3,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தற்போது, கம்யூனிஸ்ட் அணி மாறி, அ.தி.மு.க., கூட்டணியில் போட்டியிடுகிறது.
பெருந்தலைவர் மக்கள் கட்சியை சேர்ந்த தனபாலன், தி.மு.க., ஆதரவில் போட்டியிட்டார். தனபாலனுக்கு, நாடார் சமூகத்தினர் ஓட்டுகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையுள்ளது. 84 ஆயிரத்து 570 ஆண்களும், 77 ஆயிரத்து 355 பெண்களும் ஓட்டுப்பதிவு செய்துள்ளனர்.
கொளத்தூர்: தொகுதி சீரமைப்பில், புதிதாக உருவாக்கப்பட்ட தொகுதி தி.மு.க., சார்பில் ஸ்டாலின், அ.தி.மு.க., சார்பில் சைதை துரைசாமி, பகுஜன் சமாஜ் சார்பில் ஆம்ஸ்ட்ராங் உட்பட, 27 பேர் போட்டியிட்டுள்ளனர். 72 ஆயிரத்து 314 ஆண்களும், 69 ஆயிரத்து 592 பெண்களும் ஓட்டுப்பதிவு செய்துள்ளனர்.
தி.மு.க., - அ.தி.மு.க., வேட்பாளர்கள் இருவரும் சமபலம் உள்ளவர்கள் என்பதால் போட்டி அதிகளவில் இருந்தது. தி.மு.க., சார்பில் வீடு வீடாக அதிகளவு பணம் வினியோகம் செய்யப்பட்டதாக தொகுதி மக்கள் சொல்கின்றனர். மகளிர் சுயஉதவிக் குழுக்கள் பெண்கள் மூலம், தி.மு.க., அதிக ஓட்டுகள் பெற வாய்ப்புள்ளது.
சைதை துரைசாமி சளைக்காமல் தெரு தெருவாக ஓட்டு சேகரித்தோடு, மனிதநேய அமைப்பு மாணவர்களின் உதவியுடன் ஓட்டு சேகரித்தார். யாருக்கு வெற்றி என்றாலும், சொற்ப ஓட்டு வித்தியாசத்தில் தான் இருக்கும்.
வில்லிவாக்கம்: தி.மு.க., சார்பில் கட்சி பொதுச் செயலர் அன்பழகன், அ.தி.மு.க., சார்பில் பிரபாகரன் உட்பட 13 பேர் போட்டியிட்டனர். 2006ம் தேர்தலில், இந்த தொகுதி திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்ததாக இருந்தது. அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதியாக இருந்தது. தொகுதி சீரமைப்பில், சென்னை மாவட்டத்தில் சேர்க்கப்பட்டது.
மொத்த வாக்காளர்கள், 1 லட்சத்து 93 ஆயிரத்து 176. இதில், 66 ஆயிரத்து 896 ஆண்களும், 63 ஆயிரத்து 719 பெண்களும் ஓட்டுப்பதிவு செய்துள்ளனர். தி.மு.க.,வினர் அரசின் சாதனைகளை கூறி, ஓட்டு சேகரித்தாலும், பிரபாகரன் தொகுதியில் நன்கு அறிமுகமானவர். எல்லாரிடத்திலும் எளிமையாக பழக கூடியவர் என்ற பெரிய பலத்தோடு, அ.தி.மு.க.,வினர் நம்பிக்கையோடு உள்ளனர்.
திரு.வி.க., நகர்: தொகுதி சீரமைப்பில் புதிதாக உருவாக்கப்பட்ட தொகுதி. ஏற்கனவே இருந்த புரசைவாக்கம் மற்றும் எழும்பூர் தொகுதிகளில், சில வார்டுகளை இணைத்து உருவாக்கப்பட்ட தொகுதி. மொத்த வாக்காளர்கள் 1 லட்சத்து 81 ஆயிரத்து 180, இதில், 62 ஆயிரத்து 179 ஆண்களும், 61 ஆயிரத்து 591 பெண்களும் ஓட்டுப்பதிவு செய்துள்ளனர். அ.தி.மு.க., சார்பில், போட்டியிடும் நீலகண்டன் தொகுதியில் அறிமுகமானவர்.
காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் டாக்டர் நடேசன், வெளியூரை சேர்ந்தவர் என்பதாலும், வேட்பாளரை தேர்வு செய்ததில், குளறுபடி ஏற்பட்டதாலும், காங்கிரசார் தேர்தல் பணி சரிவர செய்யவில்லை. இதனால், நம்பிக்கையுடன் நீலகண்டன் வலம் வருகிறார்.

கேரள கவுரியம்மாவும்... பிரம்படியும்...

கம்யூனிசம் கொள்கையில் தளராத நம்பிக்கை கொண்டிருக்கும், 92 வயது கேரளா கவுரியம்மா, கேரளாவில் பட்டி, தொட்டியெல்லாம் தெரிந்தவர். முதன் முதலில் போட்டியிட்ட செர்தலாவில், இன்றும் மக்களை பெயர் வைத்து கூப்பிடும் அளவுக்கு பரிட்சயமானவர். குறைந்தது மூன்று தலைமுறைகளுக்கு இவரை தெரிந்திருக்கும்.
தொடர்ந்து கம்யூனிசம் தொடர்பான புத்தகங்களை படித்து வந்த இவருக்கு, அதன் கொள்கைகள் பிடித்து விட்டது. தீவிர கம்யூனிச தலைவராக உருவெடுத்தார். 1957ல், உலகிலேயே, முதன் முதலாக கேரள மக்களால் தேர்வு செய்யப்பட்ட, ஒரு கம்யூனிச அரசில், வருமானத் துறை அமைச்சராக பதவி ஏற்றார்.
54 ஆண்டுகள் கழித்தும், இன்றும் 92 வயதில் அதே தீவிர கம்யூனிச கொள்கையில் உறுதியுடன் இருக்கிறார். 1948ல் இருந்து, இதுவரை (நடப்பு தேர்தலை சேர்க்காமல்) நடந்த 16 தேர்தல்களில், 1948, 1977, 2006 ஆகிய மூன்று தேர்தல் களில் மட்டுமே தோல்வியடைந்தார்.
கடந்த, 1994ல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் ஏற்பட்ட பிளவு காரணமாக கட்சியில் இருந்து வெளியேறி, ஜனாதிபத்திய சம்ரக்ஷனா சமிதி என்ற பெயரில் கட்சி துவக்கினார். இக்கட்சியின் சார்பில், தற்போது நான்காவது முறையாக, ஆலப்புழாவில் உள்ள செர்தலாவில் போட்டியிட்டார்.
கடந்த 1957, 1967, 1980, 1987 ஆகிய ஆண்டுகளில் மார்க்சிஸ்ட் கட்சி பதவியேற்ற போது அமைச்சராக பதவி வகித்தார். 1980ம் ஆண்டுகளில் முதல்வராக முயற்சித்தார். ஆனால், ஈ.கே.நாயனார் முதல்வராக்கப்பட்டார். இவர் முதல்வராக வரவிடாமல் தடுத்தது, தற்போதைய முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் என, அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
தற்போது, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டுள்ளார். இக்கூட்டணி ஆட்சிக்கு வந்தால், கவுரியம்மாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என, காங்கிரஸ் தலைவர்கள் கூறி வருகின்றனர். இதே காங்கிரஸ் தான், செர்தலா தொகுதியை இவருக்கு விட்டு கொடுக்க சண்டித்தனம் செய்தது.
கடந்த, 1964ல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து மார்க்சிஸ்ட் கட்சி உதயமானது. இவரது கணவர் டி.வி.தாமஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் நீடிக்க, இவர் மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்தார். கட்சி கொள்கை தான் முக்கியம் என்ற முடிவில் கணவரையும் பிரிந்தார்.
"எம்.எல்.ஏ., ஆவதற்கு உடல் பலம் தேவையில்லை. மக்களின் பிரச்னைகளை தெரிந்து, சரி செய்ய நல்ல மூளை இருந்தால் போதும்' என்கிறார் கவுரியம்மா.
ஆரம்ப கட்டத்தில் ஆட்சிக்கு எதிரான புன்னபுரா - வயலூர் புரட்சியின் போது, இவரை போலீசார் கடுமையாக தடிகளால் தாக்கியதாக கூறப்பட்டது. இச்சம்பவம் குறித்து இவர் முன்பு கூறுகையில், "இச்சம்பவத்தின் போது போலீசாரின் பிரம்புகளுக்கு இனப்பெருக்க திறன் இருந்திருந்தால், நான் பிரம்பு குழந்தைகளை பெற்றிருப்பேன்' என, வருத்தத்துடன் கூறியது உண்டு.
அப்போதும் அரசியலை விட்டு நீங்காமல், உறுதியாக இருந்து, இன்று கின்னஸ் ரெக்கார்டில் இடம் பெறும் அளவுக்கு, 17வது முறை போட்டியிட்டு சாதனை படைத்துள்ளார் கவுரியம்மா.

ஜெகன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் நால்வரின் பதவியை பறிக்க காங்., திட்டம்

காங்கிரஸ் கட்சியில் இருந்தபடியே ஜெகன்மோகன் ரெட்டியை ஆதரித்து வரும், ஆந்திர காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களின் பதவியை பறிக்க, மாநில காங்கிரஸ் கட்சி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. முதல்வராக இருந்த ராஜசேகர ரெட்டி மறைந்த பின், அவரது தீவிர ஆதரவாளர்களாக கருதப்படும் 20க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.,க்கள், ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். கொண்டா சுரேகா என்ற பெண் அமைச்சர், ரோசய்யாவின் ஆட்சியின்போது, ஜெகன்மோகனுக்கு ஆதரவாக அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்தார்.
ஜெகன்மோகன் ரெட்டி விஜயவாடா மற்றும் டில்லியில் உண்ணாவிரதம் இருந்தபோதும், ராஜசேகர ரெட்டி மறைவுக்குப் பின் மாநில அளவில், "ஆறுதல் யாத்திரை' பயணம் சென்றபோதும், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அவரை நேரில் சந்தித்துப் பேசினர்.
ஜெகன்மோகன் ரெட்டியை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.,க்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறிய மாநில காங்கிரஸ் தலைமையும், முதல்வர் கிரண்குமார் ரெட்டியும், காங்கிரஸ் அதிருப்தி கோஷ்டி எம்.எல்.ஏ.,க்கள் மீது கட்சித் தலைவர் சோனியாவிடம் நேரில் புகார் செய்தனர்.
மாநில சட்டசபையிலும் இவர்கள் தனி பிரிவாக செயல்பட்டு சில நேரங்களில் முதல்வருக்கு எதிராக பேசி வந்துள்ளனர். கடந்த மாதம் ஜெகன்மோகன் ரெட்டி, ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் என்ற பெயரில் புதுக் கட்சியை துவக்கியபோதும் 10க்கும் மேற்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கலந்து கொண்டனர். சிலர், சொந்த ஊர்களில் இருந்தபடியே ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில், கடப்பா, புலிவெந்துலா தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அடுத்த மாதம் 8ம் தேதி நடைபெற உள்ளதால், நேற்று முன்தினம் புலிவெந்துலா சட்டசபை தொகுதிக்கு ராஜசேகர ரெட்டியின் மனைவி விஜயலட்சுமி வேட்புமனு தாக்கல் செய்தார்.
ஜெகன்மோகன் ரெட்டியை ஆதரிக்கும், எம்.எல்.ஏ.,க்களான கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிநாராயண ரெட்டி (ஜம்மலமடுகு), ஸ்ரீகாந்த் ரெட்டி (ராயசோடி), அமர்நாத ரெட்டி (ராஜம்பேட்டை), முன்னாள் அமைச்சர் கொண்டா சுரேகா, வாரங்கல் மாவட்டம் (பரகால தொகுதி) ஆகிய நால்வரும் கடப்பா மாவட்டத்தில் விஜயலட்சுமி மற்றும் ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்ய அங்கு முகாமிட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தை சீரியசாக எடுத்துக் கொண்ட மாநில காங்கிரசும், முதல்வரும், இவர்களின் எம்.எல்.ஏ., பதவியை பறிக்க துணை சபாநாயகரை சந்தித்து, கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதற்கான கடிதத்தை அளிக்க உள்ளதாக தெரிவித்தனர். முதல் கட்டமாக இவர்களின் பதவியை பறிக்க அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேபோன்று தெலுங்குதேசம் கட்சியை சேர்ந்த பிரசன்ன குமார் ரெட்டி, பாலநாகி ரெட்டி, சீனிவாசுலு ரெட்டி ஆகிய மூவரும் கட்சி கட்டுப்பாட்டை மீறியதாகவும், அவர்களின் எம்.எல்.ஏ., பதவியை ரத்து செய்யும்படி அக்கட்சியின் துணை சபாநாயகரிடம் கோரிக்கை வைத்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் இந்த நடவடிக்கை ஜெகன்மோகன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு கப் காபிக்கும் சொந்தக்காசு செலவு : புகாருக்கு மம்தா ஆவேச பதில்

ஒரு கப் காபி கூட என் சொந்த பணத்தை செலவு செய்து தான் குடிக்கிறேன் என, மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி ஆவேசமாகக் கூறினார். மேற்கு வங்கத்தில் நடைபெறும் சட்டசபை தேர்தலில், இன்று முதல் கட்ட ஓட்டுப்பதிவு நடக்கிறது. திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.
தேர்தலில் கறுப்புப் பணத்தை திரிணமுல் கட்சித் தலைவர் மம்தா செலவு செய்வதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் கவுதம் தேவ், குறை கூறியிருந்தார்.
இது குறித்து மம்தா பானர்ஜி குறிப்பிடுகையில், "தேர்தலில் நான் கறுப்புப் பணத்தை செலவு செய்வதாகக் கூறிய கவுதம் தேவ் மீது அவதூறு வழக்கு தொடருவேன். ஹெலிகாப்டரை பயன்படுத்தும் படி மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியதால் தான், ஹெலிகாப்டரை பயன்படுத்தி பல இடங்களில் விரைவில் பிரசாரம் செய்து வருகிறேன். ஒரு கப் காபி குடிப்பதாக இருந்தாலும் என்னுடைய மணிபர்சில் உள்ள காசைத் தான் செலவு செய்கிறேன்' என்றார்.
முன்னதாக நிருபர்களிடம் கவுதம் தேவ் குறிப்பிடுகையில், "மம்தா என் மீது வழக்கு தொடர்ந்தால் அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். ஏனென்றால் மம்தா மீது கூறிய குற்றச்சாட்டுக்கு ஏராளமான ஆதாரங்களை வைத்திருக்கிறேன். திரிணமுல் காங்கிரஸ் கட்சியில் மம்தாவும், முகுல்ராயும் பணத்தை தண்ணீராக செலவு செய்கின்றனர். தங்கள் கட்சி சார்பில் போட்டியிடும் 226 வேட்பாளர்களுக்கு தலா 15 லட்ச ரூபாய் கொடுத்துள்ளார் மம்தா. 33 கோடியே 90 லட்ச ரூபாய் கொடுக்கும் அளவுக்கு அவருக்கு பணம் எங்கே இருந்து வந்தது. இது குறித்து தேர்தல் கமிஷனிடம் நாங்கள் புகார் தெரிவிப்போம்' என்றார்.
மந்திரி மகன் கைது: மேற்கு வங்க இடதுசாரி கூட்டணி தலைவர் பிமன் போஸ் குறிப்பிடுகையில், "மத்திய அமைச்சர் முகுல் ராயின் மகன் சுப்ராங்சு ராய், பிஜப்பூர் தொகுதியில் திரிணமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் பிரசார சுவரொட்டிகளை அகற்ற உத்தரவிட்ட தேர்தல் அதிகாரிகளை சுப்ராங்சு தாக்கியுள்ளார்.
இதன் மூலம், திரிணமுல் காங்கிரசுக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கையில்லை, என்பது தெளிவாகிறது. தேர்தல் அதிகாரிகளை தாக்கிய சுப்ராங்சுவை போலீசார் உடனடியாக கைது செய்ய வேண்டும்' என்றார்.
சுப்ராங்சுவை கைது செய்யத் தவறிய உள்ளூர் போலீஸ் அதிகாரியை, தேர்தல் கமிஷன் சஸ்பெண்ட் செய்திருந்தது. தலைமறைவாக இருந்த சுப்ராங்சுவை போலீசார் நேற்று கைது செய்தனர்.
மே.வங்க மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட குஜராத் முதல்வர் நரேந்திர மோடி குறிப்பிடுகையில், "மேற்குவங்கத்தில் கடந்த 34 ஆண்டுகளாக ஆட்சி செய்யும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான அரசு, தங்கள் மாநிலத்தில் தொழிற்சாலைகளை அதிக அளவில் உருவாக்க தவறி விட்டது' என்றார்.

அடுத்த முதல்வர் யார்?மேற்கு வங்க தேர்தலில் மம்தா ஆதரவு அலை

தமிழகம், கேரளா, அசாம், புதுச்சேரி மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், நாட்டு மக்கள் அனைவரின் பார்வையும், மேற்கு வங்கத்தை நோக்கி திரும்பியுள்ளது. பாதுகாப்பு காரணம் கருதி, இங்கு ஆறு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. 34 ஆண்டுகளாக, மேற்கு வங்கத்தில் ஆட்சியில் இருந்து வரும், இடதுசாரி கட்சிகள் ஒரு கூட்டணியாகவும், மம்தாவின் திரிணமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகியவை ஒரு கூட்டணியாகவும் தேர்தலை சந்திக்கின்றன.

சிவப்பு கோட்டைமேற்கு வங்க மாநிலத்தை சிவப்பு கோட்டை என்று கூறுவது வழக்கம். அந்த அளவுக்கு, அங்கு இடதுசாரி கட்சிகளுக்கு செல்வாக்கு உள்ளது. மத்தியில் பல ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து வரும் காங்கிரஸ் கட்சியால், மேற்கு வங்க மாநிலத்தை ஒன்றும் செய்ய முடியவில்லை. கடும் முயற்சிகள் செய்தும், அங்கு இடதுசாரி கட்சிகளுக்கு, மாற்றாக காங்கிரஸ் கட்சியால் ஆட்சி அமைக்க முடியவில்லை.

மம்தா புயல் : மேற்கு வங்க காங்கிரசின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த மம்தா பானர்ஜி, காங்கிரசை விட்டு வெளியேறி, திரிணமுல் காங்கிரஸ் என்ற புதிய கட்சியை துவங்கியதும் தான், கம்யூனிஸ்ட் கோட்டையில் கொஞ்சம் ஆட்டம் ஏற்பட்டது. இடதுசாரி கட்சிகளின் ஆட்சியை எதிர்த்து, மம்தா தீவிர அரசியல் நடத்தியதற்கு பலன் கிடைத்தது. மேற்கு வங்கத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தல்கள், கடந்த லோக்சபா தேர்தல் ஆகியவற்றில் திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கு, கணிசமான வெற்றி கிடைத்தது. இடதுசாரி கட்சிகளின் ஓட்டு வங்கியில் வீழ்ச்சி ஏற்பட்டது.

சிங்கூர் பூகம்பம் : சிங்கூர், நந்திகிராம் ஆகிய விஷயங்களில் இடதுசாரி கட்சி அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால், அந்த பகுதிகளில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தது. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட மம்தா, அந்த பகுதி மக்களுக்கு ஆதரவு கரம் நீட்டினார். இதனால், நக்சலைட் ஆதரவாளர் என்ற முத்திரையும் மம்தா மீது குத்தப்பட்டது. இதற்கு சற்றும் அலட்டிக் கொள்ளாத மம்தா, மேற்கு வங்க மாநில ஆட்சிக் கட்டிலில் ஏறுவதை மட்டுமே ஒரே நோக்கமாக கொண்டு செயல்பட்டார்.ரயில்வே அமைச்சராக பொறுப்பேற்றதும், மேற்கு வங்க மாநிலத்துக்கு புதிய திட்டங்களையும், அறிவிப்புகளையும் அள்ளி வீசினார். அவரின் இந்த அதிரடி நடவடிக்கைகளால் ஆத்திரம் அடைந்த மற்ற மாநில அரசியல்வாதிகள், "இவர், இந்தியாவுக்கு ரயில்வே அமைச்சரா, மேற்கு வங்க மாநிலத்துக்கு ரயில்வே அமைச்சரா' என, கடும் தாக்குதலை தொடுத்தனர்.

அவர்களின் குற்றச்சாட்டுகளை எல்லாம் மம்தா பொருட்படுத்தவே இல்லை. இன்னும் கூறப்போனால், டில்லியை விட, கோல்கட்டாவில் உள்ள ரயில்வே அலுவலகத்தில் தான், தனது பெரும்பாலான நேரங்களை செலவிட்டார்.மம்தா எதிர்பார்த்தது போலவே, இதோ தேர்தல் வந்து விட்டது. நினைத்ததை முடித்து காட்ட, தீவிர தேர்தல் பிரசாரத்தில் இறங்கி விட்டார். கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 65 தொகுதிகளை மட்டுமே விட்டுக் கொடுத்துவிட்டு, மற்ற தொகுதிகளில் தன் கட்சி வேட்பாளர்களை களம் இறக்கினார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உள்ளூர் தலைவர்கள், இதற்காக மம்தாவை குறிவைத்து, கடும் விமர்சனம் செய்தனர். வழக்கம்போல், இந்த விமர்சனங்களையும் தூக்கி எறிந்து விட்டார் மம்தா.

கருத்துக் கணிப்பு எப்படி? இன்னும் முதல் கட்ட தேர்தல் துவங்காத நிலையில், மேற்கு வங்க மாநில சட்டசபை தேர்தலுக்கான முடிவுகள், நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில், "ஸ்டார் அனந்தா - நீல்சன்' நிறுவனங்கள் சார்பில் மேற்கு வங்கத்தில் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. 163 தொகுதிகளைச் சேர்ந்த 29 ஆயிரத்து 457 வாக்காளர்களிடம், கடந்த மார்ச் 24ம் தேதியில் இருந்து, இம்மாதம் 5ம் தேதி வரை கருத்துக்கள் கேட்கப்பட்டன. அதனடிப்படையில் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

திரிணமுலுக்கு அமோக வெற்றி : கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:மொத்தம் உள்ள 294 தொகுதிகளில், திரிணமுல் - காங்., கூட்டணி, 215 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. ஆளும் இடதுசாரி கூட்டணிக்கு 74 தொகுதிகளில் மட்டுமே வெற்றி வாய்ப்பு உள்ளது. இதன்படி, திரிணமுல் கட்சி, தனிப்பெரும்பான்மை பெற்று, ஆட்சியை கைப்பற்றும் வாய்ப்பு உள்ளது.

யாருக்கு எவ்வளவு ஓட்டு? கடந்த சட்டசபை தேர்தலில், இடதுசாரி கூட்டணிக்கு 48 சதவீத ஓட்டுகள் கிடைத்தன. இந்த தேர்தலில் அந்த கூட்டணிக்கு 39 சதவீதம் ஓட்டுகள் மட்டுமே கிடைக்கும். அதேநேரத்தில், திரிணமுல் - காங்., கூட்டணிக்கு, இந்த தேர்தலில் 48 சதவீத ஓட்டுகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. கடந்த 2004ல் நடந்த லோக்சபா தேர்தலில் துவங்கி, அதற்கடுத்து நடந்த அனைத்து தேர்தல்களிலும், இடதுசாரி கட்சி கூட்டணியின் ஓட்டு சதவீதம் வீழ்ச்சி அடைந்து வருகிறது.தற்போது நடக்கவுள்ள தேர்தலிலும் இது எதிரொலிக்கும். ஆச்சர்யம் அளிக்கும் வகையில், இந்த தேர்தலில் பா.ஜ., இரண்டு தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. அதேபோல், கடந்த லோக்சபா தேர்தலில், 1.93 சதவீதமாக இருந்த பா.ஜ.,வின் ஓட்டு சதவீதம், இந்த தேர்தலில், 6 சதவீதமாக அதிகரிப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

மம்தாவுக்கு ஆதரவு : மம்தா பானர்ஜி முதல்வராக வர வேண்டும் என, 51 சதவீதம் பேரும், புத்ததேவ் முதல்வராக வர வேண்டும் என, 40 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். புத்ததேவ் எதிர்க்கட்சி தலைவராவதற்கு ஆதரவாக 44 சதவீதம் பேரும், மம்தா எதிர்க்கட்சி தலைவராக இருக்க வேண்டும் என, 33 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர். கடந்த ஐந்தாண்டு கால இடதுசாரி கட்சி ஆட்சியில், தடுப்பூசி போடுவது மற்றும் நோய் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் பாராட்டும்படி இருந்ததாக 67 சதவீதம் தெரிவித்துள்ளனர். போக்குவரத்து துறை நன்றாக செயல்பட்டதாக 50 சதவீதம் பேரும், சாலை வசதிகள் நன்றாக இருப்பதாக 47 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர். விலைவாசி தான், மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த ஐந்தாண்டுகளில் மிகப்பெரிய பிரச்னையாக இருந்ததாக, 56 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். வேலைவாய்ப்பு வசதிகள் மோசமாக இருந்ததாக 49 சதவீதம் பேரும், தொழில் துறை மோசமாக உள்ளதாக 47 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.

எதற்காக ஓட்டு?திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதற்காக ஓட்டுப் போடுகிறீர்கள் என்ற கேள்விக்கு, "விலைவாசியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பார்கள்' என, பெரும்பாலானோர் தெரிவித்துள்ளனர். இடதுசாரி கட்சிகளுக்கு எதற்கு ஓட்டுப் போடுகிறீர்கள் என்ற கேள்விக்கும், பெரும்பாலானோர் அதே பதிலை தான் தெரிவித்துள்ளனர்.

கருத்துக் கணிப்பு பலிக்குமா?திரிணமுல் - காங்., கூட்டணியில், பெரும்பாலான தொகுதிகளில் அதிருப்தி வேட்பாளர்கள் போட்டியிடுவதால், ஆளும் கட்சிக்கு எதிரான ஓட்டுகள் சிதறுவதற்கு வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. ஒரு மாத காலம் வரை, தேர்தல் நடப்பதால், மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது. எனவே, இந்த கருத்துக் கணிப்பு, எந்த அளவுக்கு உண்மையை எதிரொலிக்கும் என்பது, ஓட்டும் எண்ணப்படும் நாளான, அடுத்த மாதம் 13ம் தேதி தான் தெரிய வரும்.

ஊழலுக்கு எதிராக அமைதியா? இல்லை என்கிறார் ராகுல்

நாட்டில் செல்லரித்து உளுத்துப் போன நடைமுறைகளை மாற்றுவதற்கான பணியில் ஈடுபட்டுள்ளேன்.எனவே, ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளில், நான் அமைதி காப்பதாக கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது' என, காங்., பொதுச் செயலர் ராகுல் கூறியுள்ளார்.

சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி கிருஷ்ணய்யர், கடந்த 9ம் தேதி, காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுலுக்கு கடிதம் எழுதினார்.

அதில் எழுதப்பட்டு இருந்ததாவது:நேரு குடும்பத்தை சேர்ந்த நீங்கள், ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடாமல், அமைதி காப்பது ஆச்சர்யமாக உள்ளது. நம் நாட்டில் ஊழல்கள் அதிகரித்து வருகின்றன. ஊழலை கட்டுப்படுத்துவதற்கான பொறுப்பு உங்களுக்கு உள்ளது. நேருவின் வாழ்க்கை வரலாற்றை படிப்பதன் மூலம், சமூகம், தேசப்பற்று, பிரிட்டிசாருக்கு எதிரான போராட்டம் ஆகியவற்றை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள முடியும். சமூக பிரச்னைகளுக்காக போராடி, ஒருநாள் கூட, நீங்கள் சிறைவாசம் அனுபவித்தது இல்லை.இவ்வாறு அந்த கடித்தில் கிருஷ்ணய்யர் எழுதியிருந்தார்.

இதற்கு தற்போது ராகுல் பதில் அளித்துள்ளார்.

அவர் கூறியதாவது:நாட்டில் செல்லரித்து உளுத்துப் போன நடைமுறைகளை மாற்றுவதற்கான பணியில் ஈடுபட்டுள்ளேன். இதற்காக, ஏராளமான நேரத்தை செலவிடுகிறேன். எனவே, ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளில், நான் அமைதி காப்பதாக கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. எந்த ஒரு விஷயத்துக்காகவும் என்னை ஹீரோவாக காட்டிக் கொள்வதில், எனக்கு உடன்பாடு இல்லை. நேருவின் சுயசரிதையை ஏற்கனவே படித்து விட்டேன். தற்போது நீங்கள் ஆலோசனை கூறியுள்ளதால், மீண்டும் ஒருமுறை படிக்கவும் திட்டமிட்டுள்ளேன்.இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.

வருத்தம்: இதற்கிடையே, கிருஷ்ணய்யர், ராகுலுக்கு நேற்று எழுதிய கடித்தில்,"நான் எழுதிய கடிதம், உங்களை காயப்படுத்தி இருந்தால், அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். நான் மிகவும் வயதானவன். மார்க்சிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மீது உள்ள கோபத்தின் காரணமாக இவ்வாறு எழுத நேரிட்டது' என, தெரிவித்துள்ளார்.