Search This Blog

Friday, December 17, 2010

கூட்டணி குறித்து அகில இந்திய காங்., முடிவெடுக்கும் :கார்த்தி சிதம்பரம் பேட்டி

தி.மு.க.,வுடனான கூட்டணியில் காங்கிரசின் நிலைப்பாடு குறித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முடிவெடுக்கும்,'' என அகில இந்திய காங்., கமிட்டி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கூறினார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா பிறந்த நாள் நிகழ்ச்சி நேற்று திருவேற்காடு உதவும் கரங்கள் இல்லத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுடன் நடைபெற்றது. நிகழ்ச்சியில், கார்த்தி சிதம்பரம் மகள் அதிதி பிறந்த நாளும் சேர்த்து கொண்டாடப்பட்டது.குறிப்பாக, ஆதரவற்ற குழந்தைகளை மகிழ்விக்கும் விதமாக ஜெயன்ட் வீல், பவுன்சிங் பால் கேசில், மேரி-கோ-ரவுண்ட் உள்ளிட்ட விளையாட்டு நிகழ்ச்சிகளும், கராத்தே, மேஜிக் ÷ஷா உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

நிகழ்ச்சியில் கார்த்தி சிதம்பரம் பேசியதாவது:காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் எனது மகள் அதிதி இருவரது பிறந்த நாளையும் உதவும் கரங்கள் இல்லத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுடன் கொண்டாடுவது என முடிவெடுத்தோம்.அரசியலைக் கூட சற்று வித்தியாசமாக செய்ய வேண்டும் என எண்ணுவதுடன், அதை பின்பற்றுவதாக நம்புகிறேன்."தேர்வு, வீட்டுப்பாடம், டியூஷன் ஆகியவை எனக்கு பிடிக்காது. சிறு வயதில் அதிகம் குறும்பு செய்ய வேண்டும்' என, நான் பள்ளி விழாக்களில் பேசுவது ஆசிரியர்களுக்கு பிடிக்காது. குறிப்பாக என்றைக்கும் குழந்தைகள் அனைவரும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும்.தி.மு.க.,வுடன் காங்கிரஸ் கூட்டணி தொடர்கிறது. நாளை (இன்று) அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூடுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கூடும் இந்த கமிட்டி மற்றும் காங்., தலைவர் சோனியா ஆகியோர் கூட்டணியில் காங்கிரசின் நிலைப்பாடு குறித்து தெரிவிப்பர்.ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பிரச்னையை பொறுத்தவரை, அரசியலில் ஒரேயொரு நிலைப்பாடு மாற்றத்தை ஏற்படுத்தாது. குறிப்பாக வரும் சட்டசபை தேர்தலில், இதனால் பாதிப்பு ஏற்படாது.இவ்வாறு கார்த்தி சிதம்பரம் பேசினார்.

நிகழ்ச்சியில், வளசை சுப.தங்கராஜ், எழும்பூர் மாமன்ற உறுப்பினர் ருக்மாங்கதன், எம்.எல்.ஏ.,க்கள் செல்வப்பெருந்தகை, சுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.முன்னதாக, திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்., தலைவர் மனோகரன் மற்றும் வளசை காங்., நகரத் தலைவர் பாலமுருகன் தலைமையில் வேலப்பன் சாவடியில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

No comments: