Search This Blog

Tuesday, December 28, 2010

இலக்கை தாண்டி ரூ.16,445 கோடியை அள்ளியது தமிழக "டாஸ்மாக்'

தமிழக, "டாஸ்மாக்' நடப்பாண்டில் அரசு நிர்ணயம் செய்த இலக்கையும் தாண்டி 16,445 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் டிச.,25 வரை மேற் கொண்ட கணக்கீன்படி 2, 464 கோடி ரூபாய் மது விற்பனை அதிகரித்துள்ளது. அரசு நிர்ணயித்த இலக்கை விட தாண்டி மது விற்பனை நடந்துள்ளது.

கடந்த 2003 நவம்பர் முதல் தமிழகத்தில், "டாஸ்மாக்' மூலம் மது விற்பனையை அரசு துவக்கியது. ஆண்டுக்கு ஆண்டு மது விற்பனையில் 2,000 கோடி ரூபாய் வரை அதிகரிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் அரசும் மது இலக்கு விற்பனையை தொடர்ந்து அதிகரித்து வந்தது. நிர்ணயிக்கப்படும் இலக்கை தாண்டி மது விற்பனையில் சாதனை படைக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 7,434, "டாஸ்மாக்' கடைகள் மூலம் மது விற்பனை மேற் கொள்ளப்படுகிறது. இந்த மது விற்பனை கடைகளில் விற்பனையாளர், கடை மேற்பார்வையாளர், ஏரியா சூப்பர் வைசர் என 34 ஆயிரத்து 323 பேர் பணி செய்து வருகின்றனர். தினம் தோறும் சராசரியாக 1.26 லட்சம் பெட்டிகள் ஐ.எம்.எஃப்.எல்., மது பானங்களும், 57 ஆயிரம் கேஸ் ( ஒரு கேஸில் 12 பாட்டில்) பீர் பாட்டில்களும் விற்பனை நடந்துள்ளது. வார நாளில் சாரசரி விற்பனை அளவு 45 கோடி ரூபாய்க்கு நடந்துள்ளது. இதுவே சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் மது விற்பனை சராசரியாக 53 கோடி ரூபாய்க்கு நடந்துள்ளது. தீபாவளி, பொங்கல், புத்தாண்டு உள்ளிட்ட விழா நாட்களின் சராசரி மது விற்பனை 92 கோடி ரூபாய் வரை நடந்துள்ளது. தமிழக, "டாஸ்மாக்' மது விற்பனை நிதியாண்டு அடிப்படையில் (மார்ச் -பிப்ரவரி என 12 மாதங்கள்) கணக்கிடப்படுகிறது. அது மட்டுமின்றி ஆண்டின் அடிப்படையிலும் மது விற்பனை கணக்கிடப்படுகிறது. அத்துடன் தமிழகத்தில் மாதம் தோறும் மாவட்ட வாரியாக மேற் கொள்ளப்படும் மது விற்பனை குறித்த தகவல், அந்தந்த மாதத்தின் கடைசி நாளில் மாநகர பகுதி எனில் போலீஸ் கமிஷனருக்கும், மாவட்ட பகுதியில் மாவட்ட எஸ்.பி.,க்கும் வழங்கப்படுகிறது.

தமிழகம் முழுவதும் மது விற்பனை சரிவு ஏற்படாமல் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதில், "டாஸ்மாக்' மது விற்பனை துவக்கப்பட்ட 2003 முதல் 2006 வரை மது விற்பனை எட்டாயிரம் கோடி ரூபாய் என்ற அளவில் இருந்து வந்தது. கடந்த 2007 - 2008 நிதியாண்டில் 10 ஆயிரத்து 486 கோடி ரூபாய் என்ற அளவில் இருந்த மது விற்பனை 2008-2009ம் ஆண்டில் 12 ஆயிரத்து 831 கோடியாக உயர்ந்தது. அதைத் தொடர்ந்து 2009 -2010 நிதியாண்டில் மார்ச் வரை மது விற்பனை 14 ஆயிரத்து 926 கோடியாக அதிகரித்தது. 2010 மார்ச் முதல் டிச.,25 வரை நிதியாண்டு கணக்கீட்டின் படி மது விற்பனை 11 ஆயிரத்து 887 கோடி விற்பனை நடந்துள்ளது. இந்த மது விற்பனை அளவை ஆண்டு கணக்கின்படி (ஜனவரி துவங்கி டிசம்பர் வரை) கணக்கிடும் போது, கடந்த 2009ம் ஆண்டில் மது விற்பனை 13 ஆயிரத்து 981 கோடிக்கு நடந்தது. இந்த மது விற்பனையை அதிகரிக்கும் வகையில் அரசு, "டாஸ்மாக்' நிறுவனத்துக்கு 2010ம் ஆண்டுக்கான விற்பனை இலக்கு, 2009ம் ஆண்டு விற்பனையை விட கூடுதலாக 2,000 கோடி என நிர்ணயம் செய்து உத்தரவிட்டது. ஆனால், அரசின் விற்பனை இலக்கை தாண்டி தற்போது மது விற்பனை நிகழ்ந்துள்ளது.

கடந்த ஜனவரி துவங்கி நடப்பு டிச.,25 வரை 359 நாட்களுக்கு தமிழக "டாஸ்மாக்' கில்16 ஆயிரத்து 445 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. அதாவது சராசரியாக தினசரி 45. 80 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்துள்ளது. இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இரண்டாயிரத்து 464 கோடி ரூபாய் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் 31ம் தேதி வரை மேலும் ஆறு நாட்களுக்கு கணக்கிட்டால் 274.80 கோடி விற்பனையாகும். மொத்தம் 16 ஆயிரத்து 719.80 கோடிக்கு விற்பனையாகும் என டாஸ்மாக் நிர்வாகம் கணக்கிட்டுள்ளது.

தமிழக அளவில் "டாஸ்மாக்' மது விற்பனையில் தர்மபுரி, கோவை, சென்னை, சேலம் ஆகிய மாவட்டங்கள் முதல் நான்கு இடங்களை பெற்றுள்ளன. இதில் தர்மபுரி மாவட்டமே மது விற்பனையில் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்து வருகிறது. இது குறித்து "டாஸ்மாக்' ஊழியர்கள் கூறியதாவது: தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்படும் இலவச திட்டங்கள் அனைத்துக்கும் "டாஸ்மாக்' மது விற்பனையே நிதி ஆதாரமாக உள்ளது. ஆண்டுக்கு ஆண்டு மது விற்பனை அளவு அதிகரித்து வந்த போதிலும், அரசு, நாங்கள் அ.தி.மு.க., ஆட்சியில் பணியில் அமர்த்தப்பட்டோம் என்ற காரணத்துக்காக எங்களை தொடர்ந்து, "மாற்றாந்தாய் பிள்ளையாக' கருதி வருகிறது. எங்களை அரசு ஊழியராக்க எந்த முயற்சியும் எடுக்கப்பட வில்லை. மாறாக நாங்கள் உரிமைக்காக நடத்திய போராட்டங்களை முறியடிக்கவே முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தால் மட்டுமே எங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கிறோம், என்றனர்.

No comments: