Search This Blog

Tuesday, May 17, 2011

5 தொகுதிகளில் பா.ஜனதா ஓட்டை பிரித்ததால் காங்கிரசுக்கு வெற்றி

சட்டசபை தேர்தலில் தமிழ்நாடு காங்கிரஸ் 63 தொகுதிகளில் போட்டியிட்டது. பெரும்பாலான இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர்கள், முக்கிய தலைவர்கள் தோல்வி அடைந்தனர். விளவங்கோடு, குளச்சல், கிள்ளியூர், பட்டுக்கோட்டை, ஓசூர் ஆகிய 5 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது. விளவங்கோடு தொகுதியில் விஜயதரணி, குளச்சலில் பிரின்ஸ், கிள்ளியூரில் ஜான்ஜேக்கப், பட்டுக்கோட்டையில் ரெங்கராஜன், ஓசூரில் கோபிநாத் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

இந்த 5 தொகுதிகளிலும் பாரதீய ஜனதா வேட்பாளர்கள் அதிக ஓட்டுகள் பெற்றுள்ளனர். அ.தி.மு.க. கூட்டணிக்கு கிடைக்க வேண்டிய ஓட்டு பிரிந்து பா.ஜனதாவுக்கு சென்றுள்ளது. எனவே, 5 தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு:-

கிள்ளியூரில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் வேட்பாளருக்கு அடுத்த இடத்தில் உள்ள பா.ஜனதா வேட்பாளர் 32 ஆயிரத்து 446 ஓட்டுகள் பெற்றுள்ளார். அ.தி.மு.க. வேட்பாளருக்கு 3-வது இடம்தான் கிடைத்தது. விளவங்கோடு காங்கிரஸ் வேட்பாளர் விஜயதரணி 23 ஆயிரத்து 789 ஓட்டுகள் வித்தியாசத்தில் மார்க்சிஸ்டு கம்யூ. வேட்பாளர் லீமாரோசை தோற்கடித்தார். இங்கு பா.ஜனதா வேட்பாளர் 37 ஆயிரத்து 763 ஓட்டுகள் பெற்றுள்ளார். இதனால் காங்கிரசுக்கு வெற்றி கிடைத்துள்ளது.

குளச்சல் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரிடம் அ.தி.மு.க. வேட்பாளர் லாரன்ஸ் 11 ஆயிரத்து 821 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இங்கு பா.ஜனதா பெற்ற ஓட்டுகள் 35 ஆயிரத்து 778. ஓசூரில் காங்கிரஸ் வேட்பாளரிடம் 14 ஆயிரத்து 15 ஓட்டு வித்தியாசத்தில் தே.மு.தி.க. தோற்றது. இங்கு பா.ஜனதா பெற்ற ஓட்டுகள் 19 ஆயிரத்து 217 தே.மு.தி.க.வுக்கு இது கிடைத்திருந்தால் வெற்றி பெற்றிருக்கும்.

பட்டுக்கோட்டையில் காங்கிரஸ் வேட்பாளரிடம் தே.மு.தி.க. வேட்பாளர் 8 ஆயிரத்து 779 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இங்கு பாரதீய ஜனதா 3-வது இடத்தை பிடித்தது. அந்த கட்சி வேட்பாளர் வாங்கிய ஓட்டு 10 ஆயிரத்து 164. இங்கு பா.ஜனதா போட்டியிடாமல் இருந்திருந்தால் ஓட்டுகள் பிரியாமல் அ.தி.மு.க. கூட்டணி கட்சியான தே.மு.தி.க.வுக்கு கிடைத்திருக்கும். இதனால் தே.மு.தி.க. வேட்பாளர் வெற்றி பெற்றிருப்பார் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்

No comments: