Search This Blog

Monday, October 11, 2010

தமிழகத்தில் தனித்தன்மை பெற்றகட்சியாக காங்.,வளர்ந்துள்ளது: பீட்டர் அல்போன்ஸ்

தமிழகத்தில் காங்., தனித்தன்மை பெற்ற கட்சியாக வளர்ந்து வருவதற்கு சாட்சியாக திருச்சியில் சோனியா கலந்து கொண்ட பொதுக்கூட்டம் அமைந்திருப்பதாக தமிழக சட்டசபை காங்., கொறடா பீட்டர் அல்போன்ஸ் எம்.எல்.ஏ., தெரிவித்தார்.
கடையநல்லூரில் நேற்று அவர் கூறியதாவது:-அகில இந்திய அளவில் காங்., கட்சி 125வது ஆண்டு விழாவினை மிகச் சிறப்பாக கொண்டாடி வருகிறது என்றால் இந்திய அளவில் காங்., கட்சி மக்களோடு இணைந்துள்ள மாபெரும் கட்சியாக அமைந்துள்ளது தான் முக்கிய காரணமாகும். மத்தியில் காங்., கட்சி ஆட்சி பொறுப்பேற்கும் போதெல்லாம் அந்த ஆட்சி காலம் மக்களுக்கான ஆட்சியாகத்தான் இருந்து வரும்.

கடைக்கோடி மக்களை கூட காங்., அரசின் நலத்திட்டங்கள் பயன்பெறும் வகையில் அவை செயல்படுத்தப்படும். தற்போது அனைத்து உலக நாடுகளும் போற்றக்கூடிய திட்டமாக தேசிய வேலை வாய்ப்பு உறுதியளிப்பு திட்டம் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான அரசு அறிவித்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பெண்களுக்கு மட்டுமின்றி அனைவருக்கும் வேலை வாய்ப்பிற்கான உறுதி வழங்கும் திட்டமாக இந்த திட்டம் அமைந்துள்ளது.

காங்., ஆட்சி காலத்தில் தான் சிறப்பு பெற்ற திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. பிரதமராக இந்திரா இருந்தபோது பசுமைப்புரட்சி திட்டத்தை கொண்டு வந்தார். ராஜிவ் பிரதமராக இருந்தபோது அகிலம் போற்றும் வகையில் தகவல் தொழில் புரட்சி இந்தியாவை பெருமைப்படுத்திய நாடாக விளங்க செய்தது. அதுமட்டுமின்றி அவரது ஆட்சி காலத்தில் கிராமப்புற மேம்பாட்டை கருத்தில் கொண்டு பஞ்சாயத்துராஜ் சட்டமும் பரிந்துரைக்கப்பட்டது.தற்போது கடந்த 5 ஆண்டு காலம் மட்டுமின்றி மீண்டும் பிரதமராக பொறுப்பேற்றுள்ள மன்மோகன்சிங் ஆட்சியில் இந்தியாவை வல்லரசாக்கிடும் வகையில் பெருமைமிகு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அகில இந்திய காங்., தலைவர் சோனியா ஆலோசனையின்படி காங்.,கட்சி மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை மக்கள் மத்தியில் எடுத்துச் சென்று வருகிறது.தமிழகத்தை பொறுத்தவரை காங்., கட்சி தொடர்ந்து வளர்ச்சி பாதையை கண்டு வருகிறது. இளைஞர் காங்., உறுப்பினர்கள் சேர்க்கை மட்டுமின்றி காங்., மற்றும் தீவிர காங்., உறுப்பினர் சேர்க்கையிலும் பல லட்சம் உறுப்பினர்களை கொண்ட கட்சியாக காங்., வளர்ந்துள்ளது. அகில இந்திய காங்., பொது செயலாளர் ராகுல் ஆலோசனையின்படி இளைஞர் காங்., கட்சியினர் மத்திய அரசின் திட்டங்களை மக்கள் மத்தியில் எடுத்துச் சென்று வருகின்றனர்.

தமிழகத்தில் காங்., கட்சி தனித்தன்மை பெற்ற கட்சியாக வளர்ந்துள்ளது. அதற்கு சாட்சியாக அமைந்தது தான் காங்., தலைவர் சோனியா கலந்து கொண்ட திருச்சி பொதுக்கூட்டமாகும். அத்தகைய வகையில் லட்சக்கணக்கான காங்., தொண்டர்கள் பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இது காங்., கட்சியின் வளர்ச்சிக்கு மேலும் ஒரு சான்றாக அமைந்திருப்பது பெருமைக்குரியதாக உள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments: