Search This Blog

Thursday, August 26, 2010

சட்டசபை தேர்தலில் 100 இடங்களில் பா.ம.க., போட்டி: ராமதாஸ்

தமிழகத்தில் வரும் சட்டசபை தேர்தலில் 100 இடங்களில் பா.ம.க., போட்டியிட்டு, வெற்றி பெரும் வகையில் கிராமம் தோறும் இளைஞர்கள், இளம்பெண்கள் மூலம் பா.ம.க.,வின் கொள்கை கோட்பாடுகள் விளக்கப் பட்டு வருகின்றன,'' என காடையாம்பட்டியில் நடந்த பயிற்சி முகாமில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார்.

சேலம் மாவட்டம் ஓமலூர் தொகுதிக்கு உட்பட்ட காடையாம்பட்டியில் பா.ம.க., சார்பில் நடத்தப்பட்ட இளம்பெண்கள், இளைஞர்களுக்கான பயிற்சி முகாமில் ராமதாஸ் பேசியதாவது: தமிழகத்தில் படிப்பு, வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு முக்கியத்துவம் அளிக்காததால், இட ஒதுக்கீடு கேட்டு வன்னியர் சங்கத்தை துவக்கினேன். பின், வன்னியர்கள் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக பா.ம.க., வை துவக்கினேன். உங்களில் ஒருவர் கேட்டார், ஏன் தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறுகிறீர்கள் என்று, எந்தக் கட்சி தமிழகத்தில் கூட்டணி மாற்றம் செய்ய வில்லை. தமிழகத்தில் வன்னியர்கள் ஓட்டு பா.ம.க.,வுக்கு தான் என உறுதி அளித்தால், நான் தனித்து போட்டியிட தயார். அது உங்களைப் போன்ற இளைஞர்கள், இளம்பெண்கள் கையில் தான் உள்ளது. தமிழகத்தை ஆட்சி செய்ய 117 எம்.எல்.ஏ.,க்கள் இருந்தால் போதும், 100 தொகுதியில் பா.ம.க., போட்டியிட்டு வென்றாலே ஆட்சியை பிடித்து விடலாம்.

வன்னியர்கள் வாழ, வளர, உயர தமிழகத்தில் பா.ம.க., ஆட்சி அமைந் தால் மட்டுமே முடியும். வன்னியர்கள் ஓட்டு வன்னியர்களுக்கு தான் என, நாம் அறிவித்தால் பிற ஜாதியினர் ஓட்டு வன்னியர்களுக்கு இல்லை என்னும் மாயத் தோற்றத் தை உருவாக்குகின்றனர். ஆனால், அதே நேரத்தில் பிற சமூகத்தினருக்கு வன்னியர் ஓட்டு போட வேண்டுமாம். தமிழகத்தில் பா.ம.க., ஆட்சி அமைந்தால், அது சமூக நீதி ஆட்சியாக அனைத்து ஜாதி மக்களும் பயன் பெற முடியும். வரும் தேர்தலில் பா.ம.க., 100 தொகுதிகளில் வெற்றி பெரும் வகையில் இது போன்ற பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் கிராம் தோறும் இளைஞர்கள், இளம்பெண்களுக்கு பா.ம.க.,வின் கொள்கை, கோட்பாடுகள், வன்னியர்கள் வளம் பெற மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் தங்களின் கிராம மக்களுக்கு தெரிவித்து ஒவ்வொருவரும் வரும் தேர்தலில் 100 ஓட்டுக்களை பா.ம.க., வுக்கு பெற்றுத் தரவேண்டும், என்றார்.

No comments: