Search This Blog

Thursday, July 29, 2010

தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு எப்போது

தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டால் தான், ஒவ்வொரு ஜாதியினருக்கும் எவ்வளவு இடஒதுக்கீடு அளிக்கலாம் என்பதை முடிவு செய்ய இயலும்' என, தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை: அருந்ததியர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் தனி இடஒதுக்கீடு வழங்கி வருவதை முன்னுதாரணமாகக் காட்டி, வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் சொல்லியிருக்கிறார். அவர் வைத்துள்ள கோரிக்கையில் இருக்கும் அடிப்படை நியாயங்களைப் பற்றி எல்லாம் இந்தத் தருணத்தில் நான் விரிவாக விவாதிக்க விரும்பவில்லை. அருந்ததியர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் உள் ஒதுக்கீட்டையும், சிறுபான்மை இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் உள் ஒதுக்கீட்டையும், வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீட்டுடன் ஒப்பிடுவது பொருத்தமாக இருக்காது. "தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கென நிறைவேற்றப்பட்ட சட்டம் செல்லாது' என சுப்ரீம் கோர்ட்டில், 1994ம் ஆண்டு வழக்கு தொடுக்கப்பட்டது. 16 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது சுப்ரீம் கோர்ட் இடைக்கால தீர்ப்பு ஒன்றை வழங்கியிருக்கிறது.

அந்த இடைக்காலத் தீர்ப்பில், "ஒரு மாநிலம் 50 சதவீத இடஒதுக்கீட்டு அளவை விஞ்ச வேண்டுமென்றால், அதை நியாயப்படுத்துவதற்குத் தேவையான புள்ளிவிவரங்களின் அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்' எனச் சொல்லப்பட்டுள்ளது. அந்தத் தீர்ப்பின் அடிப்படையில், நாம் தேவையான புள்ளிவிவரங்களை பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அளித்து, அந்த ஆணையம் நாம் அளிக்கும் புள்ளிவிவரங்களை ஆராய்ந்து, இடஒதுக்கீட்டு அளவை முடிவு செய்யும் வாய்ப்பை உருவாக்க வேண்டும். இந்தப் புள்ளிவிவரங்களைச் சேகரிப்பதற்கு, நமக்கு ஜாதிவாரியான மக்கள் தொகை விவரங்கள் வேண்டும். அதற்கு, ஜாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட வேண்டும். தமிழகத்தில் மட்டும் ஜாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ள, 400 கோடி ரூபாய் தேவை. இந்த நிதியை, மத்திய அரசிடம் பெறலாம் என, பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் ஆலோசனை வழங்கியிருக்கிறது.

சுப்ரீம் கோர்ட் இடைக்கால தீர்ப்பின்படி, தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டால் தான், வன்னியர்களுக்கு எவ்வளவு இடஒதுக்கீடு அளிக்கலாம்; ஒவ்வொரு தனிப்பட்ட ஜாதியினருக்கும் எவ்வளவு இடஒதுக்கீடு அளிக்கலாம் என்பதை முடிவு செய்ய இயலும். அப்படிச் செய்தால் தான், சட்டப்படி அந்த முடிவுகள் செல்லுபடியாகும். வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு பிரச்னையில், அவசர முடிவு எதையும் மேற்கொள்வதற்கு, சுப்ரீம் கோர்ட்டின் இடைக்கால தீர்ப்பு இடம் தரவில்லை. ஜாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொண்டு, நமது மாநிலத்துக்கான இடஒதுக்கீட்டு அளவை நிர்ணயம் செய்து, அதற்குப் பிறகு தனி ஒதுக்கீடு பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது தான் சட்டப்படியான அணுகுமுறையாக அமையும். இதில் அவசரம் காட்டினால், பிரச்னை திசை திரும்பிவிடக் கூடும் என்பதாலும், இருப்பதையும் இழந்துவிடக் கூடாது என்பதாலும், தொடர்புடைய அனைவரும் இந்தப் பிரச்னையில் இணக்கமான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என நான் பெரிதும் விரும்புகிறேன். எனவே, இருப்பதை இழக்காமல் இடஒதுக்கீடு அமைய இணைந்து செயல்படுவோம். இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.

No comments: